20 தமிழர்கள் கொல்லப்பட்ட சம்பவம்: விசாரணைக்கு ஆந்திர அரசு உத்தரவு
திருப்பதி: திருப்பதி அருகே வனப்பகுதியில் தமிழகத்தைச் சேர்ந்த 20 தொழிலாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக விசாரணைக்கு ஆந்திர அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆந்திராவின் திருப்பதி வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டியதாக கூறி நேற்று அதிகாலை 20 தமிழக தொழிலாளர்கள் அம்மாநில போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். தற்காப்புக்காகவே தமிழக தொழிலாளர்களைச் சுட்டுக் கொன்றதாக ஆந்திர போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்தனர். மேலும், தமிழகத்தின் வேலூர், திருவள்ளூர் மாவட்ட காவல்துறையினரும் சம்பவ இடத்தில் சோதனை நடத்தினர்.
ஆந்திர உள்துறை அமைச்சர் சின்னராஜப்பா ஹெலிகாப்டரில் இருந்தபடியே சம்பவ இடத்தை பார்வையிட்டார். தொழிலாளர்கள் உயிரிழந்த இடத்தை பார்வையிட்ட பல்வேறு அரசியல்கட்சியினர், இது போலி என்கவுண்டர் என்றும் இதற்கு காரணமானவர்களை கைது செய்யவேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக உரிய விளக்கம் அளிக்குமாறு தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஆந்திர அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆந்திர மாநில தலைமைச் செயலாளர், காவல்துறை தலைவர் ஆகியோர் இரண்டு வார காலத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என்று தேசிய மனித உரிமைகள் ஆணையம் அனுப்பியுள்ள நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஆந்திர முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘இச்சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும், இதில் மனித உரிமைமீறல் நிகழ்ந்திருந்தால் அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டுவர சித்தூர் மாவட்ட கலெக்டர் சித்தார்த்ஜெயின், மாவட்ட வருவாய் அதிகாரியான விஜயசந்தரை சிறப்பு அதிகாரியாக நியமித்து நீதி விசாரணை நடத்தும்படி திருப்பதிக்கு அனுப்பி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக விஜயசந்த் கூறுகையில், ‘சித்தூர் மாவட்ட கலெக்டர் சித்தார்த் உத்தரவின் பேரில், நான் நேரில் சென்று பார்வையிட்டேன்; ஒரு இடத்தில் ஒன்பது சடலங்களும், மற்றொரு இடத்தில், 11 சடலங்களும் கிடந்தன. நடந்த சம்பவம் குறித்து அறிய, துப்பாக்கிச் சூடு நடத்திய போலீசாரை விசாரணைக்கு அழைத்தோம்; ஆனால், இரவு 7:00 மணியாகியும் யாரும் வரவில்லை. அவர்களிடம் விசாரணை நடத்திய பின் தான், சம்பவம் குறித்த முழு விவரங்கள் தெரிய வரும்.இறந்தவர்களின் அடையாளமும், இதுவரை தெரியவில்லை. முதல் தகவலறிக்கையும் இன்னும் பதிவு செய்யப்படாததால், அவர்களின் உறவினர்களிடம் தகவல் கூறவில்லை.இறந்தவர்களின் உடல்களை, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.