வேண்டாம் இந்த விபரீதம்!.. போக்குவரத்து விதிமீறுவோரை கைகூப்பி அறிவுறுத்தும் ஆந்திரா போலீஸ்!!
ஆந்திராவில் போக்குவரத்து விதிகளை மீறிவோரை கைகூப்பி வணங்கி அறிவுறுத்துவது போன்ற புகைப்படம் தற்போது வைரலாகியுள்ளது.
ஹைதராபாத்: ஆந்திராவில் போக்குவரத்து விதிகளை மீறி இரு சக்கர வாகனத்தில் ஏராளமானோரை அழைத்து செல்லும் வாகன ஓட்டியிடம் கைகூப்பி வணங்கிய போலீஸ் அதிகாரி.
போக்குவரத்து விதிகளை மீறுவதால் ஏராளமான விபத்துகள் ஏற்படுவதோடு உயிரிழப்புகள் நடைபெறுகின்றன. இதை தடுக்க காவல் துறை ஏராளமான விழிப்புணர்வு திட்டங்களை நடத்தி வருகின்றன.
குறிப்பாக ஹெல்மெட் அணிந்து செல்வது, காரில் ஷீட் பெல்ட் அணிந்து செல்வது, இரு சக்கர வாகனத்தில் அளவுக்கு மீறி ஆள்கள் பயணம் செய்வது, சிக்னல் போடுவதற்கு முன்னர் முண்டியடிப்பது உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகின்றன.
போக்குவரத்து விதிமீறல்
அனந்தபூர் மாவட்டத்தில் இன்று ஒரு பைக்கில் வாகன ஓட்டி ஹனுமந்தராயுடுவின் குடும்பத்தினர் இருவர் பின்னிருக்கையிலும், வாகனத்தின் பெட்ரோல் டேங்க் மீது இரு சிறுவர்கள் என 5 பேர் அமர்ந்திருந்தனர். இது போக்குவரத்து விதிகளை மீறியது. இதை காவல் துறை ஆய்வாளர் சுபகுமார் கண்டார்.
அபராதம் விதிக்கவில்லை
சுபகுமார் வாகனத்தை நிறுத்தியவுடன் அபராதம் ஏதேனும் வசூலிப்பார் என்று ஹனுமந்தராயுடு அச்சமடைந்தார். ஆனால் சுபகுமாரோ தனது இரு கைகளையும் கூப்பி வணங்கி இதுபோல் போக்குவரத்து விதிகளை மீற வேண்டாம் என்று வணங்கினார். இது தொடர்பான புகைப்படம் வைரலானது.
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
இதுகுறித்து சுபகுமார் கூறுகையில், அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சாலையில் ஒன்றரை மணி நேரமாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினேன். அப்போது ஹனுமந்ராயுடுவும் அங்கிருந்தார். அந்த வாகனத்தில் 5 பேர் பயணிப்பது என்பது ஆபத்தானது. இதை பார்த்தவுடன் எனக்கு ஒன்றும் புரியவில்லை. இரு குழந்தைகள் பெட்ரோல் டேங்க் மீது அமர்ந்துள்ளனர். இதனால் வண்டியின் ஹேண்டில் பாரில் இவர்களது கால்கள் படுவதால் வாகன ஓட்டிக்கு இடம் இல்லை. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
குடும்பத்தினர் மீது பொறுப்பு இல்லை
அவர் ஹெல்மெட் கூட அணியவில்லை. ஹனுமந்தராயுடு எப்போதும் போக்குவரத்து விதிகளை மீறியே பயணம் செய்துவருகிறார். நாங்கள் பலமுறை எச்சரித்துவிட்டோம். அவருடைய குடும்பத்தினரின் நலன் குறித்து அக்கறை வேண்டும் என்பதால்தான் நான் வேறு வழியில்லாமல் கைகூப்பி வணங்கி கேட்டுக் கொண்டேன்.
மக்களுக்கு அக்கறை இல்லை
ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவம், சாலை பாதுகாப்பு, விபத்து நிகழ்வது எப்படி, வாகனத்தில் அளவுக்கு அதிகமானோரை ஏற்றுவது உள்ளிட்டவற்றை எடுத்துரைக்கும் வகையில் வீடியோ காட்சிகளை வாகன ஓட்டிகளிடம் போட்டு காண்பிப்போம். இது மட்டுமல்லாது விபத்தில் சிக்கி தங்கள் குடும்பத்தினரை இழந்து வாடுவோரின் பேட்டிகளையும் அதனால் அவர்களின் வாழ்க்கை மாற்றத்தையும் வீடியோவாக போட்டு காண்பிப்போம். எனினும் மக்கள் அதை பற்றி கவலை கொள்வதில்லை என்கிறார் சுபகுமார்.
போலீஸ் என்றாலே லஞ்சம்தான் என்று முத்திரை குத்தப்பட்ட நிலையில் இப்படியும் சமூக அக்கறை கொண்ட அதிகாரிக்கு ஒரு சபாஷ் போடுவோம்.