சிபிஐ இயக்குநராக அனில்குமார் சின்ஹா நியமனம்
டெல்லி: சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹா, ஓய்வு பெற்றதை தொடர்ந்து, புதிய இயக்குநராக பீகார் மாநிலத்தின் மூத்த ஐபிஎஸ் அதிகாரி அனில் குமார் சின்ஹா புதிய இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நாட்டின் உயர்ந்த விசாரணை அமைப்பான சிபிஐயின் இயக்குநர் பதவி என்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. தற்போது அதன் இயக்குநராக அனில்குமார் சின்ஹா பதவி வகித்து வருகிறார். இவரது பதவிக்காலம் இன்றுடன் முடிவதால், புதிய இயக்குநரை தேர்வு செய்ய நேற்று இரவு ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடந்தது.
இந்த கூட்டத்தில், பிரதமர் நரேந்திரமோடி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் (தனிப்பெரும் கட்சி) மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் கூடி புதிய இயக்குநர் தேர்வு குறித்து விவாதித்தனர். அப்போது சுமார் 40 அதிகாரிகளின் பெயர்களை இக்குழு பரிசீலித்தது. இறுதியில் அனில்குமார் சின்ஹா பெயர் உறுதி செய்யப்பட்டது.
1979ம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரியாக பிகாரில் பணியில் சேர்ந்த அனில் குமார் சின்ஹா, சிபிஐயின் சிறப்பு இயக்குநராக பதவி வகித்து வந்தார். சிபிஐ இயக்குநராகப் பதவியேற்கும் அவர், பதவியேற்ற நாளில் இருந்து அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இப்பதவியில் தொடருவார்.
டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் ரஞ்சித் சின்ஹாவுக்கு செவ்வாய்க்கிழமை பிரியாவிடை அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இவர், சிபிஐ இயக்குநராக 2 ஆண்டுகள் பதவி வகித்துள்ளார். அண்மையில் உச்ச நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக 2ஜி, நிலக்கரிச் சுரங்க ஊழல்களில் தொடர்புடையவர்களை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி பொதுநல வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 2ஜி ஊழல் வழக்கு விசாரணையில் இருந்து விலகியிருக்கும்படி ரஞ்சித் சின்ஹாவுக்கு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.