கேரளாவில் மது பார்களை திறக்க லஞ்சம்: மேலும் ஒரு அமைச்சருக்கு 'சிக்கல்'
திருவனந்தபுரம்: கேரளாவில் மது பார்களைத் திறக்க ரூ10 கோடி லஞ்சம் கேட்டதாக கலால்துறை அமைச்சர் பாபு மீதும் குற்றச்சாட்டு கூறப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் மூடப்பட்ட மது பார்களை மீண்டும் திறப்பதற்கு ரூ.1 கோடி லஞ்சம் வாங்கியதாக கேரள மாநில நிதி அமைச்சராக இருந்த கேரள காங்கிரஸ் (எம்) தலைவரான கே.எம்.மானி மீது புகார் கூறப்பட்டது.
இது தொடர்பாக வழக்கில் முகாந்திரம் இருப்பதாக கூறி மானிக்கு எதிராக விசாரணை நடத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து அவர் ராஜினாமா செய்தாக வேண்டும் என்ற குரல் வெடித்தது. இதனால் மானி தமது பதவியை சில நாட்களுக்கு முன்பு ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் கேரள கலால் துறை அமைச்சர் கே.பாபு மீதும் தற்போது ரூ10 கோடி லஞ்ச குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. மதுபார்களை மீண்டும் திறக்க அவர் ரூ.10 கோடி லஞ்சமாக பெற்றதாக கேரள மது பார் உரிமையாளர்கள் சங்கத்தலைவர் பிஜூ ரமேஷ் கூறியுள்ளார்.
இந்த பிஜூ ரமேஷ்தான் மானியின் பதவிக்கு வேட்டு வைத்தவர்... தற்போது அமைச்சர் பாபு மீதான புகார் மீது நடவடிக்கை எடுக்க கோரி நீதிமன்றத்தை நாடப் போவதாகவும் பிஜூ ரமேஷ் கூறியுள்ளார். ஆனால் அமைச்சர் பாபு இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.
மேலும் அமைச்சர் பாபு மீது விசாரணை நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் வி.எஸ். அச்சுதானந்தனும் வலியுறுத்தியுள்ளார்.
கேரளாவில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான முன்னணி பின்னடைவை சந்தித்த நிலையில் அடுத்தடுத்து அமைச்சர்கள் மீது லஞ்ச புகார் எழுந்திருப்பது அம்மாநில அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.