ராஜ்யசபாவில் எதிரொலித்த வர்தா புயல்- உரிய நிவாரணம் வழங்குவதாக ஜேட்லி உறுதி!!
ராஜ்யசபாவில் வர்தா புயல் பாதிப்பு எதிரொலித்தது. தமிழகத்துக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என அருண்ஜேட்லி உறுதி அளித்துள்ளார்.
சென்னை: வர்தா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய உடனடியாக மத்திய குழுவை அனுப்ப வேண்டும் என தமிழக எம்.பி.க்கள் ராஜ்யசபாவில் வலியுறுத்தினர். இதற்கு பதிலளித்த நிதி அமைச்சர் அருண்ஜேட்லி, தமிழகத்துக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என உறுதியளித்தார்.
ராஜ்யசபா இன்று கூடியதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி. ராஜா, வர்தா புயல் குறித்து பேசினார். அப்போது, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் புயலின் பாதிப்பு மிக மோசமாக இருக்கிறது; இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது; ஆகையால் உடனே மத்திய குழுவை அனுப்பி பாதிப்பு விவரங்களை கணக்கிட வேண்டும் என வலியுறுத்தினார்.

அவரைத் தொடர்ந்து பேசிய திமுகவின் திருச்சி சிவா, வர்தா புயலால் சென்னை உள்ளிட மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான மரங்கள் சாலைகளில் விழுந்துள்ளன; 1 லிட்டர் பால் ரூ200க்கு விற்பனை செய்யப்படுகிறது; மின்சாரம், இண்டர்நெட் சேவை எதுவும் இல்லை; ஏடிஎம் மையங்களில் பணமும் இல்லை; தமிழகத்துக்கு புயல் நிவாரண நிதியாக ரூ10,000 கோடி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ரங்கராஜன், பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி ஆகியோரும் இதே கோரிக்கையை வலியுறுத்தினர். காங்கிரஸின் ப.சிதம்பரம் பேசுகையில், தமிழக வங்கிகளுக்கு கூடுதலாக பணம் அனுப்ப வேண்டும்; ஏடிஎம் மையங்களில் உடனே பணத்தை நிரப்ப வேண்டும்; உடனடியாக இடைக்கால நிவாரணத்தை தமிழகத்துக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதிலளித்த நிதி அமைச்சர் அருண்ஜேட்லி, வர்தா புயல் தாக்கியதைத் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனைகள் நடத்தப்படுகின்றன. தமிழகத்துக்கு தேவையான புயல் நிவாரண நிதி வழங்கப்படும் என உறுதியளித்தார்.












Click it and Unblock the Notifications