அர்விந்த் கேஜ்ரிவாலை விடுவிக்க கோரி உயர் நீதிமன்றத்தில் மனு
டெல்லி: பாஜக மூத்த தலைவர் நிதின் கட்காரி தொடர்ந்த அவதூறு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவாலை விடுதலை செய்யக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பாஜக முன்னாள் தலைவர் நிதின் கட்கரி தொடர்ந்த அவதூறு வழக்கில், ஜாமீன் பெற பிரமாண பத்திரம் அளிக்க மறுத்த டெல்லி முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அர்விந்த் கேஜ்ரிவாலை ஜூன் 6ம் தேதிவரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க டெல்லி நீதிமன்றம் கடந்த புதன்கிழமை உத்தரவிட்டது. இதையடுத்து உடனடியாக அவரை போலீஸார் கைது செய்தனர்.
இந்த நிலையில் அரவிந்த் கேஜ்ரிவாலை விடுதலை செய்யக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவில், அரவிந்த் கேஜ்ரிவால் சட்டத்துக்கு விரோதமாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு,டிவிசன் பெஞ்ச் நீதிபதிகள், பி.டி.அகமது, சித்தார்த் மிருதுள் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனு செவ்வாயன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.