லோக்பால் மசோதா- டெல்லி துணைநிலை ஆளுநரிடம் மோதும் ஆம் ஆத்மி அரசு
டெல்லி: லோக்பால் மசோதா விவகாரத்தில் டெல்லி துணை நிலை ஆளுநருடன் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு மோதிக் கொண்டிருக்கிறது.
டெல்லி மாநில முதல்வராக பதவியேற்றதில் இருந்து ஆம் ஆத்மி கட்சி தலைவர் கேஜ்ரிவால் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ஊழலுக்கு எதிராக மத்திய அரசு நிறைவேற்றியுள்ள லோக்பால் சட்டத்தினால் எந்த பயனும் இல்லை என்பது கேஜ்ரிவால் கருத்து.
அத்துடன் டெல்லி மாநில அரசு சார்பில் மக்கள் லோக்பால் சட்ட மசோதா நிறைவேற்றப்படும் என்றும் அறிவித்து இருந்தார். கடந்த 3-ந் தேதி அன்று மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் லோக்பால் மசோதாவின் வரைவு அறிக்கைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
முதல்வர் முதல் டி பிரிவு வரை அனைத்து அரசு ஊழியர்களையும் இந்த சட்ட வரம்புக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் ஆயுள் தண்டனை வரை விதிக்கவும் இதில் வகை செய்யப்பட்டு உள்ளது.
வருகிற 13-ந் தேதி அன்று இந்த மசோதாவை டெல்லி சட்டசபையில் தாக்கல் செய்து 2 நாட்கள் விவாதத்திற்கு பின் டெல்லியில் உள்ள விளையாட்டு அரங்கில் நடத்தப்படும் சட்டசபை கூட்டத்தில் மசோதா நிறைவேற்றப்படும் என்றும் ஆம் ஆத்மி கட்சி அறிவித்து இருந்தது.
இந்த நிலையில், இந்த மசோதாவின் வரைவு அறிக்கையை கசியவிட்டதாக, டெல்லி துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங்குடன் கெஜ்ரிவால் மோதலை தொடங்கி இருக்கிறார்.
இந்த விவகாரத்தில் ஆளுநருக்கு கெஜ்ரிவால் கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார். அதில், மக்கள் லோக்பால் மசோதாவை முடக்க முயற்சிக்கும் காங்கிரஸ் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் நலனை பாதுகாக்க வேண்டாம் என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
கடுமையான வார்த்தைகளால் எழுதப்பட்டுள்ள அந்த கடிதத்தில், ‘நிர்ப்பந்தத்துக்கு பணியப்போகிறீர்களா, இல்லையா? என்பதை தற்போது நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் கெஜ்ரிவால் கூறி இருக்கிறார்.
அத்துடன் இந்த விவகாரத்தை வெளியே கசியவிட்டதற்கு கண்டனம் தெரிவித்த ஆம் ஆத்மி கட்சியின் செய்தி தொடர்பாளரும், முன்னாள் பத்திரிகையாளருமான அஷுதோஷ், ஆளுநர் நஜீப்பை காங்கிரஸ் கட்சியின் ஏஜெண்டு என்று குறிப்பிட்டு இருந்தார்.
இதைத் தொடர்ந்து கெஜ்ரிவால் ஆளுநருக்கு இந்த கடிதத்தை எழுதி உள்ளார்.