வாலன்டியராக ஜெயிலுக்குப் போன கெஜ்ரிவால்... மீண்டும் தெருச் சண்டையில் குதிக்கும் ஆம் ஆத்மி
டெல்லி: கோர்ட்டில் நீதிபதி பலமுறை கேட்டுக் கொண்டும் கூட ஜாமீ்ன் பெறவே மாட்டேன் என்னை சிறையில் அடையுங்கள், நான் சிறைக்குப் போகிறேன் என்று வடிவேலு பாணியில் விடாப்பிடியாக கூறி தற்போது திஹார் சிறைக்குள் ஹாயாக உட்கார்ந்திருக்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால். இதையடுத்து இன்று டெல்லியில், அவரது கட்சியினர் பல்வேறு போராட்டங்களில் குதிக்க ஆரம்பித்துள்ளனர்.
இதன் மூலம் டெல்லி தெருக்களில் மீண்டும் ஒரு சண்டையில் குதிக்கிறது ஆம் ஆத்மி. கெஜ்ரிவால் முதல்வராக இருந்தபோதே முற்றுகைப் போராட்டம், மறியல் என்று குதித்து புதிய வரலாறு படைத்த கட்சி ஆம் ஆத்மி. இது மக்களிடையே பெரும் முகச் சுளிப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து போராட்டத்தை பாதியிலேயே விட்டு விட்டுப் போனார்கள்.
இந்த நிலையில் இழந்த செல்வாக்கை மீண்டும் மீட்கும் நோக்கத்திலேயே, போராட்டங்கள் நடத்துவதற்கு வசதியாக கெஜ்ரிவால் அவராகவே விரும்பி சிறைக்குப் போயிருப்பதாக கூறப்படுகிறது.
ராத்திரியில் திஹார் சிறையில்
நேற்று இரவு முழுவதும் கெஜ்ரிவால் திஹார் சிறையில் கழித்தார். சிறைக்கு வெளியே நேற்று இரவில் போராட்டத்தில் ஈடுபட்ட அவரது கட்சியினரையும் போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.
போலீஸாருடன் மோதல்
மேலும் போலீஸாருடனும் ஆம் ஆத்மி கட்சியினர் மோதலில் ஈடுபட்டனர். போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. அப்பகுதியில் தடை உத்தரவு போடப்பட்டும் கூட அவர்கள் அதைப் பொருட்படுத்தாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து 50க்கும் மேற்பட்டோரை புளி மூட்டை போல தூக்கி போலீஸார் பஸ்களில் போட்டு அப்புறப்படுத்தினர்.
இன்றும் போராட்டங்கள்
கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக இன்றும் டெல்லியில் பல்வேறு வகையிலான போராட்டங்களை ஆம் ஆ்த்மி கட்சியினர் அறிவித்துள்ளனர். இதனால் டெல்லி தெருக்களை ஆம் ஆத்மி கட்சியினர் மீண்டும் ஸ்தம்பிக்க வைக்கப் போகின்றனர்.
சிசோடியா விடுவிப்பு
இதற்கிடையே போராட்டம் நடத்திக் கைதான ஆம் ஆத்மி தலைவர் மனீஷ் சிசோடியா இன்று காலையில் போலீஸாரால் விடுவிக்கப்பட்டார். முன்ட்கா போலீஸ் நிலையத்தில் அவரை போலீஸார் வைத்திருந்து விடுவித்தனர்.
மோடி பதவியேறின்போது சலசலப்பை ஏற்படுத்தவா..?
நரேந்திர மோடி வருகிற திங்கள்கிழமை பிரதமராக பதவியேற்கவுள்ளார். இந்த சமயத்தில் சலசலப்பை ஏற்படுத்தி பப்ளிசிட்டி தேடிக் கொள்ள கெஜ்ரிவால் அன் கோவினர் முயல்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.