பீகாரில் 10ம் வகுப்பு தேர்வில் வெறும் 44.66% பேரே தேர்ச்சி: மாணவிகளை தோற்கடித்த மாணவர்கள்
பாட்னா: பீகாரில் 10ம் வகுப்பு தேர்வில் வெறும் 44.66 சதவீதம் பேர் தான் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
பீகார் மாநிலத்தில் 15.47 லட்சம் மாணவ, மாணவியர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியானது. தேர்வு எழுதியவர்களில் வெறும் 44.66 சதவீதம் பேர் தான் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
தேர்வில் முறைகேடுகள் செய்வதற்கு பெயர் போன மாநிலம் பீகார். இந்த ஆண்டு முறைகேடுகளை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் தேர்ச்சி விகிதம் வெகுவாக குறைந்துள்ளது.
கடந்த ஆண்டு 75.17 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 28 சதவீதம் குறைந்துள்ளது. முதல் 10 இடங்களை பிடித்துள்ள 42 மாணவர்கள் ஜாமுய் மாவட்டத்தில் உள்ள சிமுல்தலா அவசியா வித்யாலயா எனும் அரசு பள்ளியை சேர்ந்தவர்கள்.
தேர்வு எழுதிய 15.47 லட்சம் பேரில் 8.21 லட்சம் பேர்(53%) தோல்வி அடைந்துள்ளனர். பிற மாநிலங்களை போல் இல்லாமல் பீகாரில் மாணவிகளை விட மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
தேர்வு எழுதிய மாணவிகளில் 37.61 சதவீதம் பேரும், மாணவர்களில் 54.44 சதவீதம் பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.