டெல்லியில் மீண்டும் ஆட்சியை பிடிக்குமா ஆம் ஆத்மி? பம்மும் காங்கிரஸ், பதிலடிக்கு பாஜக ரெடி!
டெல்லி: நாடக மேடையின் திரை விலகுவதை போல, டெல்லி சட்டசபை தொடர்பாக நீடித்த மர்மம் விலகியுள்ளது. ஒருவழியாக சட்டசபையை கலைக்க துணை நிலை ஆளுநர் ஒப்புதலும் வழங்கியுள்ளார். பிப்ரவரி மாதம் அரவிந்த் கேஜ்ரிவால் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஆட்சிக்கு 'குட்பை சொன்னது முதல் 8 மாத காலமாக நீடித்த சஸ்பென்ஸ் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
தேசமே நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகிக் கொண்டிருந்த நேரத்தில் டெல்லி பிரச்சினை மறக்கப்பட்டிருந்தது. எனவே இப்போது மீண்டும் சூடு பிடித்துள்ளது.

இருப்பை தக்க வைக்குமா ஏஏபி
ஆம் ஆத்மி கட்சிக்கு டெல்லி சட்டசபை தேர்தல் ஒரு திருப்புமுனையாக அமைந்திருந்தது. விஸ்வரூபம் எடுத்த அக்கட்சி 28 தொகுதிகளை வென்றது. காங்கிரஸ் வெளியிலிருந்து தந்த ஆதரவை கொண்டு ஆம் ஆத்மி ஆட்சியையும் அமைத்தது. ஆனால் 49 நாட்களிலேயே ஆட்சிக்கு மூடு விழா அறிவிக்கப்பட்டது. இதன்பிறகு நடந்த லோக்சபா தேர்தலில் ஆம் ஆத்மிக்கு கடுமையான அடி விழுந்தது. எனவே டெல்லி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றால்தான் ஆம் ஆத்மி தனது அரசியல் இருப்பை உறுதி செய்ய முடியும் என்ற நிலை உள்ளது.

வாய்ப்புக்கு வாயிலை திறக்குமா டெல்லி
வாரணாசியில் பாஜக பிரதமர் பதவிக்கான வேட்பாளராக களம் கண்ட நரேந்திர மோடியை எதிர்த்து போட்டியிட்டார் கேஜ்ரிவால். ஆனால் மோடியிடம் 3 லட்சத்து 37 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பெரும் தோல்வியை தழுவினார் கேஜ்ரிவால். நாடு முழுக்க 400 வேட்பாளர்களை நிறுத்தியும், 4 இடங்களில் மட்டுமே ஆம் ஆத்மி வெற்றி பெற முடிந்தது. அதுவும், டெல்லியை சுற்றியுள்ள பகுதிகளில் மட்டுமே. இந்த தோல்விகள், ஆம் ஆத்மி தலைவர்களை சொர்க்கத்தில் இருந்து தரைக்கு இழுத்து வந்து நிதர்சன உலகம் எது என்பதை காண்பித்தது. இந்நிலையில்தான், தவறை உணர்ந்து தனது ராஜினாமாவுக்காக டெல்லி வாக்காளர்களிடம் மன்னிப்பு கேட்டார் கேஜ்ரிவால்.

உள்ளதும் போகுமோ..
இப்போது நடைபெறும் சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி பழைய பெருமையை மீட்டெடுத்து, கடந்த முறையைவிட அதிகம் தொகுதிகளில் வெற்றி பெறுமா, அல்லது உள்ளதையும் இழக்குமா என்பதே இப்போது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. ஆனால் நிலவரத்தை வைத்து பார்க்கும்போது ஏஏபி கட்சி கலவரத்தில் இருப்பதாகவே தெரிகிறது. கடந்த முறை டெல்லி பேரவை தேர்தலில் போட்டியிட்டபோது இருந்த ஒற்றுமையும், ஆக்ரோஷமும் ஆம் ஆத்மியில் தற்போது சுத்தமாக இல்லை. இதற்கு காரணம், அடுத்தடுத்த தோல்விகள் மட்டுமின்றி தோல்விகளால் ஏற்பட்ட உட்கட்சி பூசலும்தான்.

உட்கட்சி பூசல்
ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய முகங்களான ஷாசியா இல்மி, குமார் விஸ்வாஸ் உள்ளிட்ட பலரும், கட்சியை விட்டு ஒதுங்கிவிட்டனர், அல்லது ஒதுக்கப்பட்டுள்ளனர். எம்.எல்.ஏ வினோத் பின்னி போன்றோர் வெளிப்படையாகவே தலைமையை விமர்சனம் செய்துள்ளனர். டெல்லி வாக்காளர்கள் மத்தியில் ஒரே ஒரு கேள்வி விடையளிக்கப்படாமல் உள்ளது. கடந்த முறை ஆட்சியமைத்த ஆம் ஆத்மி அவசர கதியில் ராஜினாமா செய்து டெல்லி சட்டசபை முடக்கத்துக்கு காரணமானதைப்போல, மீண்டும் செய்யாது என்பதற்கு என்ன நிச்சயம்? என்பதுதான் அந்த கேள்வி.

பரிதாப நிலையில் காங்கிரஸ்
டெல்லி சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ள மற்றொரு முக்கிய கட்சி காங்கிரஸ். ஆனால் ஏன்தான் இப்போது தேர்தல் வந்ததோ என்று நினைக்கும் நிலையில்தான் அக்கட்சி உள்ளது. 2013 டிசம்பரில் டெல்லி சட்டசபைக்கு நடந்த தேர்தலின்போது ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் பாஜக, ஆம் ஆத்மிக்கு பின்னால் மூன்றாவது இடத்தில் போய் உட்கார்ந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் அக்கட்சி மீளவில்லை. அதுமட்டுமா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டீஸ்கரிலும் அப்போது படுதோல்வியையே சந்தித்தது காங்கிரஸ். அடுத்தாற்போல லோக்சபா தேர்தலிலும் அக்கட்சிக்கு தோல்வியே மிஞ்சியது. இதில் லேட்டஸ்ட்தான் ஹரியானா, மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள். இந்த தோல்வி பாதையில் இருந்து எப்படி மீளுவது என்ற ஒரு ஐடியா கூட காங்கிரசின் கண்களுக்கு இன்னும் தட்டுப்படவேயில்லை. இந்நிலையில் காங்கிரஸ் பரிதாபமாக தோற்ற டெல்லியில் மீண்டும் தேர்தல் நடக்கிறது.

பாஜகவுக்கு வாய்ப்பு எப்படி?
ஆம் ஆத்மி, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளின் நிலைமையும் மோசமாக இருப்பதையும், மோடியின் அலையையும் சாதகமாக்கிக் கொண்டு பாஜகவால் டெல்லியில் தனிப்பெரும்பான்மை பெற முடியுமா என்பது எஞ்சியிருக்கும் கேள்வி. கடந்த சட்டசபை தேர்தலில் பாஜகவின் முதல்வர் வேட்பாளராக, டெல்லி மக்களிடம் மிகவும் பரிட்சையப்பட்ட ஹர்ஷவர்த்தன் அறிவிக்கப்பட்டார். ஆனால் ஆட்சியமைக்க ஹர்ஷவர்த்தன் முன்வராத நிலையில், தற்போது அவர் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக பதவி வகிக்கிறார்.

மோடியிருக்க பயமேன்
டெல்லியில் சொல்லிக்கொள்ளும்படியான உள்ளூர் தலைவர்கள் பாஜகவில் இல்லை. ஹர்ஷவர்த்தன் மீண்டும் மாநில அரசியலுக்கு திரும்பும் திட்டமும் இல்லை. எனவே ஹரியானா, மகாராஷ்டிர தேர்தல்களை போலவே முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமல் மோடியை முன்னிறுத்தியே தேர்தலை சந்திக்க பாஜக முடிவு செய்துள்ளது. அவ்விரு மாநிலங்களில் மோடி எவ்வாறு பிரச்சாரம் செய்தாரோ அதேபோல டெல்லியிலும் களம் இறங்க உள்ளார். இதை ஆம் ஆத்மியும், காங்கிரசும் எப்படி எதிர்கொள்ளப்போகின்றன என்பதில்தான் மிச்ச விடை உள்ளது.












Click it and Unblock the Notifications