மல்லையா சொத்துக்கள் இன்று மறு ஏலத்திற்கு வருகை.. விலையை குறைத்தாவது விற்க திட்டம்
மும்பை மற்றும் கோவாவில் உள்ள மல்லையாவுக்குச் சொந்தமான இல்லங்கள் அதிக விலை காரணமாக கடந்த 24-ஆம் தேதி யாரும் ஏலம் எடுக்காததால், அதன் மதிப்பில் 10 சதவீதம் விலைக்குறைக்கப்பட்டு இன்று மறு ஏலத்துக்கு விடப்
மும்பை: வங்கிகளில் மல்லையா பெற்ற கடனை திரும்ப பெறுவதற்காக அவரது சொத்துகள் 10 சதவீதம் விலை குறைக்கப்பட்டு இன்று மறுபடியும் ஏலத்துக்கு வந்துள்ளது.
கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களை நடத்தி வந்தவர் விஜய் மல்லையா. அவர் பாரத ஸ்டேட் வங்கி, ஆக்சிஸ் வங்கி உள்ளிட்ட வங்கிகளிலிருந்து ரூ.9,000 கோடியை கடனாகப் பெற்றுக் கொண்டு லண்டனில் தலைமறைவாக உள்ளார்.
அந்த கடனை வசூல் செய்வதற்காக அவரது சொத்துக்களை கடன் கொடுத்தோர் கூட்டமைப்பு (எஸ்.பி.ஐ.கேப்ஸ் நிறுவனம் ) மூலம் ஏலத்திற்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டன. அதன்படி மும்பையில் உள்ள கிங்ஃபிஷர் இல்லம் மற்றும் கோவாவில் உள்ள கிங்ஃபிஷர் வில்லா ஆகியவற்றை கடந்த 24-ஆம் தேதி ஏலத்துக்கு அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் விலை அதிகமாக இருந்ததால் அந்த சொத்துகளை ஏலம் எடுக்க யாரும் முன்வரவில்லை. கடந்த 3 முறை ஏலத்திற்கு வந்தபோதும் அதிக விலை கேட்கப்பட்டதால் இவற்றை யாரும் ஏலம் எடுக்க முன்வரவில்லை.
இந்நிலையில் அந்த சொத்துகள் 10 சதவீதம் விலை குறைக்கப்பட்டு இன்று மீண்டும் ஏலத்துக்கு வந்துள்ளன. மும்பை இல்லத்தின் ஆரம்ப விலை ரூ.103.5 கோடியாகவும், கோவா சொத்தின் விலை ரூ.73 கோடியாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.