பாபர் மசூதி இடிப்பு வழக்கு: அத்வானி உட்பட 9 பேருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
டெல்லி: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் விடுவிக்கப்பட்டதற்கு எதிரான வழக்கில் பாஜக தலைவர்கள் அத்வானி, உமாபாரதி, முரளி மனோகர் ஜோஷி உள்பட 9 பேருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
கடந்த 1992ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பாக ரேபரேலியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் 2 வழக்குகள் தொடரப்பட்டன.
மசூதி இடிக்கப்பட்டபோது, அந்த இடத்தில் போடப்பட்டிருந்த மேடையில் கூடியிருந்த பா.ஜ.க கட்சியின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி மற்றும் கல்யாண் சிங், உமா பாரதி உள்ளிட்ட 20 முக்கிய தலைவர்கள் மீது ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.
மேலும், சர்ச்சைக்குரிய இடத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான கரசேவகர்கள் மீது மற்றொரு வழக்கும் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம், அத்வானி மற்றும் இதர தலைவர்களுக்கு எதிரான வழக்கிலிருந்து அவர்களை விடுவித்து, 2001ம் ஆண்டு தள்ளுபடி செய்தது.
இது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம், 2010ம் ஆண்டு சிபிஐ நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தது. எனினும், கரசேவகர்கள் மீதான வழக்கை தொடர்ந்து நடத்த உத்தரவிட்டது.
இந்நிலையில், அத்வானி மற்றும் இதர தலைவர்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சிபிஐ தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை, தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து மற்றும் சி.கே.பிரசாத் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.
அப்போது பா.ஜனதா மூத்த தலைவர் அத்வானி, உமா பாரதி, முரளி மனோகர் ஜோஷி உள்பட 9 பேருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். அத்துடன் 4 வார காலத்திற்குள் விளக்கம் அளிக்க சி.பி.ஐக்கு உத்தரவிட்டது.