நிர்வாக வசதிக்காக பெங்களூர் நகரை பிரிக்க அரசு முடிவு: ஆய்வு செய்ய மூவர் குழு அமைப்பு
பெங்களூர்: பெருநகரமாக விரிவடைந்துள்ள நாட்டின் தகவல் தொழில்நுட்ப தலைநகரான பெங்களூரை நிர்வாக ரீதியாக பிரிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக முன்னாள் தலைமைச் செயலாளர் பி.எஸ்.பாட்டீல் தலைமையில் மூவர் குழு அமைக்கப்பட்டு இன்னும் மூன்று மாதங்களில் அக்குழுவிடமிருந்து அறிக்கையை பெற உள்ளது கர்நாடக அரசு.
மக்கள் குவிகின்றனர்
இஸ்ரோ, ஹெச்.ஏ.எல், பெல் உள்ளிட்ட பெருவாரியான மத்திய அரசு நிறுவனங்கள் மட்டுமின்றி, ஐடி நிறுவனங்களும் குவிந்துள்ள நகரம் பெங்களூர். இதனால் வேலைவாய்ப்பு தேடி அண்டை மாநிலங்களில் இருந்து மட்டுமின்றி வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இருந்தும் பெங்களூரில் மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
பெருநகரமான பெங்களூர்
226 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டிருந்த பெங்களூர் நகரத்துடன், பொம்மனஹள்ளி, கே.ஆர்.புரம், ராஜராஜேஸ்வரிநகர் உட்பட 7 நகராட்சிகளும், ஒரு டவுன் பஞ்சாயத்தும், 110 கிராமங்களும் இணைத்துக்கொள்ளப்பட்டு, 2007ம் ஆண்டு ஜனவரி 16ம்தேதி முதல், பெருநகர் பெங்களூர் மாநகராட்சி (BBMP) என்று பெங்களூர் மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம், 800 சதுர கிலோ மீட்டர் கொண்ட பெருநகரமாக பெங்களூர் உருவெடுத்துள்ளது.
போக்குவரத்து நெரிசல்
நகரம் பல மடங்கு விரிவடைந்துள்ளதால், நிர்வாக பணிகளுக்காக, பொது மக்கள் பெங்களூரின் மையப்பகுதியிலுள்ள மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்து செல்ல கால விரையம், அலைச்சல், பொருள் விரையம் ஏற்படுகிறது. பெங்களூரின் போக்குவரத்து நெரிசல் மிக கொடூரமானது என்பதால், மாநகராட்சி அலுவலகத்திற்கு அலைய மக்கள் பெரிதும் துன்பப்படுகின்றனர். இதை தவிர்க்க நிர்வாக ரீதியாக பெங்களூரை பிரிக்க கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது.
மூவர் குழு
இதற்காக முன்னாள் தலைமை செயலர் பி.எஸ்,பாட்டீல் தலைமையில், மூவர் குழுவை அமைத்துள்ளது கர்நாடக அரசு. இந்த குழுவில் பாட்டீலை தவிர, முன்னாள் மாநகராட்சி கமிஷனர் சித்தய்யா மற்றும் நகர்ப்புற கட்டமைப்பு வல்லுநர் வி.ரவிச்சந்தர் ஆகியோரும் இருப்பார்கள். இந்த குழு அடுத்த மூன்று மாதங்களுக்குள் தனது ஆய்வறிக்கையை அரசிடம் அளிக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இன்று முதல் மூவர் குழு தனது ஆய்வை தொடங்கியுள்ளது.
எத்தனை பகுதிகளாக பிரியும்?
பெங்களூர் நகரை இரண்டாகவோ இல்லை அதற்கு மேலாகவோ பிரித்து ஆங்காங்கு உள்ள மக்கள் தேவைகளை அப்பகுதிகளிலேயே முடித்துக்கொள்ள வகை செய்யும் வகையில் மாநகராட்சி பிரிப்பு இருக்கும் என்று தெரிகிறது. எத்தனை பிரிவுகளாக பிரிப்பது, தனித்தனி மேயர்களை தேர்ந்தெடுப்பதா, அல்லது ஒரே மேயர் போதுமா என்பது போன்ற பல கோணங்களில் இக்குழு ஆய்வு செய்யும். மாநகராட்சி தேர்தலுக்கு முன்பாக பெங்களூர் பிரிக்கப்படும் என்று தெரிகிறது. மும்பையின் பரப்பளவு 603 சதுர கிலோமீட்டராகும், கொல்கத்தாவின் பரப்பளவு 186 சதுர கிலோமீட்டராகும் என்பது குறிப்பிடத்தக்கது.