பெங்களூரு குண்டு வெடிப்பு: சம்பவ இடத்தில் பதிவான 1 லட்சம் செல்போன் அழைப்புகள் ஆய்வு
பெங்களூரு: பெங்களூரு எம்ஜிரோடு சர்ச் தெரு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் நடைபெறும்போது அப்பகுதியில் பதிவான செல்போன் எண்களை கொண்டு போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதகுறித்து பெங்களூரு நகர மத்திய மண்டல போலீஸ் துணை கமிஷனர் சந்தீப் பாட்டீல் அளித்த பேட்டி: குண்டு வெடிப்பை தொடர்ந்து, நகரின் வேறு பகுதிகளிலும் குண்டுகள் வெடிக்க கூடும் என்று வதந்திகள் பரவுகிறது. அதையெல்லாம் நம்ப வேண்டாம் என்று மக்களை கேட்டுக்கொள்கிறோம்.
குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடத்தில் உள்ள செல்போன் நெட்வொர்க் வழங்கும் நிறுவனங்களின் கோபுரங்களில் பதிவான செல்போன் எண்களை ஆய்வு செய்து வருகிறோம். குண்டு வைத்துவிட்டு சென்ற நபரின் தொலைபேசி எண், இப்பகுதியிலுள்ள செல்போன் டவரில் பதிவாகியிருக்க கூடும் என்பதால் இந்த சோதனை நடத்தப்படுகிறது.
குண்டுவெடிப்புக்கு முன்னும், பின்னும் பதிவான 1 லட்சம் அழைப்புகளை ஆய்வு செய்துவருகிறோம். அந்த அழைப்புகள் எங்கிருந்து வந்துள்ளன அல்லது எங்கு சென்றுள்ளன, வெளிநாட்டு அழைப்பு ஏதேனும் உள்ளதா என்பது குறித்தெல்லாம் ஆய்வு செய்து வருகிறோம்.
பெங்களூருவில் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெறும் எம்.ஜி.ரோடு, பிரிகேட் ரோடு பகுதிகளில் 700 போலீஸ் கான்ஸ்டபிள்கள் பாதுகாப்புக்காக நியமிக்கப்படுவார்கள். 10 வாட்சிங் டவர்கள் அங்கு அமைக்கப்படும். இரவிலும் தெளிவாக படம் பிடிக்க கூடிய சிசிடிவி கேமராக்கள் இப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ளன.
கேரளா, தமிழகத்திற்கு தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.