”மனைவி குண்டாகிவிட்டார், விவாகரத்து வேணும்” – பெங்களூர் டாக்டர் மனு - மனைவிக்கு 20 ஆயிரம் நிவாரணம்!
பெங்களூர்: பெங்களூரில் மனைவி குண்டாகிவிட்டதாகக் கூறி விவாகரத்து கேட்ட டாக்டரிடம் இருந்து மனைவிக்கு வழக்கு முடியும் வரை மாதாமாதம் 20 ஆயிரம் ரூபாய் ஜீவனாம்சம் வழங்கி உத்தரவிட்டுள்ளது கர்நாடகா நீதிமன்றம்.
பெங்களூரைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும், டாக்டர் ஷஷாங்குக்கும் 2007 இல் திருமணம் நடந்தது.
திருமணத்துக்கு பின் எம்.டி படிக்க சண்டிகார் சென்றார் மருத்துவர் ஷஷாங்க்.
கணவரின் படிப்புச் செலவு:
அப்போது தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய பொறியியல் பட்டதாரியான மனைவி தனது 25 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் 20 ஆயிரம் ரூபாயை கணவரின் படிப்பு செலவுக்காக அனுப்பி வந்துள்ளார்.
குண்டாகிவிட்டார் என் மனைவி:
இந்நிலையில் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, பின்னர் சரியானது. 2011 இல் எம்.டி பட்டப்படிப்பை முடித்து பெங்களூரு திரும்பிய ஷஷாங்க் "என் மனைவி மன ரீதியில் தொந்தரவு செய்கிறார். தற்போது மிகவும் குண்டாகி விட்டார்.
நீதிமன்றத்தில் விவாகரத்து மனு:
இனி அவருடன் வாழ்க்கை நடத்த முடியாது. எனவே, விவாகரத்து வழங்க வேண்டும்" எனக்கோரி பெங்களூர் குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
மாதம் 75 ஆயிரம் ரூபாய் சம்பளம்:
தற்போது ஷஷாங்க் பெங்களூரில் பிரபலமான மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றுகிறார். 75 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெறுகிறார்.
லட்ச ரூபாய் சம்பளத்தால் வினை:
மேலும், இரண்டு தனியார் மருத்துவமனைகளில் பகுதி நேர டாக்டராகவும் பணியாற்றுகிறார். மாதம் லட்சம் ரூபாய் வரை சம்பாதிப்பதால் ரேவதி தனக்கு பொருத்தமான மனைவியல்ல என எண்ணிய ஷஷாங்க் விவாகரத்து முடிவை எடுத்துள்ளார்.
முதலில் 10 ஆயிரம் ரூபாய்:
இதுகுறித்து விசாரணை நடத்திய குடும்ப நல நீதிமன்றம் வழக்கு விசாரணை முடியும் வரை ரேவதிக்கு இடைக்கால ஜீவனாம்சமாக 10 ஆயிரம் ரூபாய் வழங்கும்படி ஷஷாங்குக்கு உத்தரவிட்டுள்ளது.
வேலையும் பறி போனது:
குடும்ப பிரச்னையால் வேலையையும் இழந்து விட்ட ரேவதி "குடும்ப நல நீதிமன்றம் நிர்ணயித்த ஜீவனாம்ச தொகை போதுமானதாக இல்லை. தொகையை அதிகமாக்க வேண்டும்" என கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் முறையிட்டார்.
கர்நாடக நீதிமன்றம் அதிருப்தி:
இம்மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் ஷஷாங்குக்கு கடும் கண்டனம் தெரிவித்தது. "நீங்கள் நடந்து கொள்வது சரியல்ல. திருமணத்துக்கு முன் இதையெல்லாம் ஏன் ஆலோசித்து பார்க்கவில்லை?" என அதிருப்தி தெரிவித்துள்ளது நீதிமன்றம் .
20 ஆயிரம் இடைக்கால நிவாரணம்:
மேலும், "மாதம் தோறும் மனைவி ரேவதிக்கு 20 ஆயிரம் ரூபாய் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்" என உத்தரவிட்டு உள்ளது.
சம்பளம் அதிகரித்தால் அதிக நிவாரணம்:
அத்துடன் கணவரின் ஊதியம் அதிகரிக்கும்போது ஜீவனாம்ச தொகையை அதிகரிக்க கோரி மனு தாக்கல் செய்யவும் ரேவதிக்கு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்து உள்ளது.