சட்ட விரோத லாட்டரி விற்பனையில் தொடர்பு: பெங்களூர் கூடுதல் கமிஷனர் அதிரடி சஸ்பெண்ட்
பெங்களூர்: சட்டவிரோத லாட்டரி தொழிலுக்கு உடந்தையாக இருந்ததாக சிஐடி பிரிவு குற்றம்சாட்டியதன்பேரில் பெங்களூர் நகர கூடுதல் போலீஸ் கமிஷனரும், மூத்த ஐ.பி.எஸ் அதிகாரியுமான அலோக் குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடகாவில் லாட்டரி விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் சட்டவிரோதமாக ஒற்றை இலக்க லாட்டரி விற்பனை நடைபெற்று வருவதாக அரசுக்கு புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. இதையடுத்து சிஐடி விசாரணைக்கு அரசு உத்தரவிட்டது.
சிஐடி தனது விசாரணை அறிக்கையை இரு நாட்கள் முன்பாக, அரசிடம் அளித்தது. அதில், 6 ஐபிஎஸ் அதிகாரிகள், ஆறு முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட மொத்தம் 32 போலீஸ் அதிகாரிகள், உடந்தையாக இருந்ததாக கூறப்பட்டுள்ளது.
லாட்டரி விற்பனையின் முக்கிய குற்றவாளி பாரி ராஜன், கோலார் மாவட்டம் பங்காருப்பேட்டையில் இருந்தபோது, அவரை கைது செய்ய முயன்ற சப்-இன்ஸ்பெக்டருக்கு அலோக் குமார் போன் செய்து, பாரிராஜனை கைது செய்ய கூடாது என்று உத்தரவிட்டாராம். இதை சப்-இன்ஸ்பெக்டர் எழுத்துப்பூர்வமாக சிஐடியிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அலோக்குமாரை, மாநில அரசு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அலோக் குமார் கூறுகையில், பாரிராஜனை மற்றொரு மூத்த அதிகாரி எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். பாரிராஜன் எனது நலம்விருப்பி. அவர் லாட்டரி தொழில் தொடர்புள்ளவர் என்பது பற்றி எனக்கு தெரியாது. இதுபற்றி எந்த விசாரணைக்கும் தயார் என்றார்.
பெங்களூர் நகரின் மிக முக்கிய போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது காவல்துறை வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.