பெங்களூர் மார்க்கெட்டில் அடுத்தடுத்து 2 குண்டுகள் வெடிப்பு: பி.இ. மாணவர் உள்பட 2 பேர் காயம்
பெங்களூர்: பெங்களூரில் உள்ள மார்க்கெட்டில் நேற்று மதியம் இரண்டு குண்டுகள் வெடித்ததில் இரண்டு பேர் காயம் அடைந்தனர்.
பெங்களூரில் பி.இ. இரண்டாம் ஆண்டு படிக்கும் தேவசந்திராவைச் சேர்ந்த சரண் என்பவர் பெங்களூர் பல்கலைக்கழகத்திற்கு செல்ல பேருந்தில் ஏற நகர மார்க்கெட் பகுதி வழியாக நேற்று மதியம் சென்றுள்ளார். அப்போது அவர் வெடிகுண்டை மிதிக்க அது வெடித்ததில் அவரது காலில் காயம் ஏற்பட்டது. அது சக்திவாய்ந்த குண்டாக இல்லாமல் போனதால் சரண் லேசான காயங்களுடன் தப்பித்தார்.
அந்த சம்பவம் நடந்த 5வது நிமிடத்தில் ராம்கோபால் என்பவர் நகர மார்க்கெட் பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தில் இருந்து தனது அலுவலகத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் குறைந்த சக்தி கொண்ட குண்டை மிதித்ததில் அது வெடித்தது. இதில் அவரது காலில் காயம் ஏற்பட்டது.
சரணும், ராம்கோபாலும் விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இந்த குண்டுகள் வனவிலங்குகளை கொல்ல வேட்டைக்காரர்கள் பயன்படுத்துவார்கள். பூண்டு அல்லது சிறிய வெங்காயம் போன்று இருக்கும் இந்த வகை குண்டுகள் மீது மாவு அல்லது வேறு ஏதாவது உணவுப் பொருளை தடவி வைத்து விலங்குகளை பிடிக்க பயன்படுத்தப்படும்.
வேட்டைக்காரர்கள் விலங்குகளை கொல்ல எடுத்துச் சென்ற குண்டுகளில் இரண்டு தவறி விழுந்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.