முதலீடுகளை ஈர்ப்பதில் பெங்களூர் தொடர்ந்து முதலிடம்! பாடம் கற்குமா சென்னை?
பெங்களூர்: கடும் டிராபிக் நெரிசல், செலவுமிக்க வாழ்க்கை முறை உள்ளிட்ட பல சிக்கல்கள் இருந்தாலும், முதலீட்டாளர்களை பொறுத்தளவில் பெங்களூர் நகரம் தொடர்ந்து சொர்க்கமாகவே கண்களுக்கு தெரிகிறது. பெங்களூரில் வந்து குடியும் முதலீடுகளை வைத்து பார்க்கும்போது, அந்த நகரம் கடந்த 10 வருடங்களாக தென் இந்தியாவில் செலுத்திவரும் ஆதிக்கம் அதிகரித்துக் கொண்டே வருவது தெள்ளத் தெளிவாகிறது.
கனெக்ட்டிவிட்டி
இந்தியாவின் சிலிக்கான்வேலி, ஏசி சிட்டி, பூங்காநகரம் என பல செல்லப்பெயர்களால் அழைக்கப்படுவது பெங்களூர். தென் இந்தியாவின் நடு நாயகமாக அமைந்துள்ளதால், சென்னை, ஹைதராபாத், திருவனந்தபுரம், பானாஜி போன்ற தென் இந்தியாவின் முக்கிய நகரங்கள் அத்தனைக்கும் பாலமாக அமைந்துள்ளது.
ஐடி புரட்சி
பெங்களூருவில் 2001ம் ஆண்டு முதல் தகவல் தொழில்நுட்ப துறை வெகுவேகமாக முன்னேறத் தொடங்கியது. அதற்கு அப்போதைய முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா முக்கிய காரணமாக இருந்தார். இந்த வளர்ச்சியை குறைந்துவிடாமல் பார்த்துக் கொண்டன அடுத்தடுத்து வந்த அரசுகள். இதன்விளைவாக, இன்று இன்போஃசிஸ், விப்ரோ, டிசிஎஸ் என நூற்றுக்கணக்கான பெரிய ஐடி நிறுவனங்களும், அதைவிட அதிகமாக சிறு மற்றும் குறு ஐடி நிறுவனங்களும் இங்கு குவிந்துள்ளன.
உற்பத்தியிலும் முன்னணி
ஐடி நிறுவனங்கள் மட்டுமின்றி, உற்பத்தி துறையிலும் பெங்களூர் முதலீடுகளை ஈர்த்தது. வோல்வோ, டொயோட்டோ போன்ற பெரிய வாகன உற்பத்தி நிறுவனங்கள், தங்கள் உற்பத்தி பிரிவை பெங்களூருவில் தொடங்கியுள்ளன. இதன் காரணமாக, பெங்களூர் நகருக்கு வேலை தேடி வருவோர் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது.
ஆயிரம் பிரச்சினைகள்
மக்கள் தொகை அதிகரிப்பால், கடந்த 15 ஆண்டுகளில் பெங்களூர் நகரம் விரிவடைந்துவிட்டது. அடிப்படை வசதிகளும் பாதிக்கப்பட்டது. டிராபிக் நெருக்கடியால் நகர சாலைகள் விழிபிதுங்குகின்றன. புறநகர் ரயில் வசதி இல்லாததால் அனைத்து பயணிகளும் சாலையை மட்டுமே நம்பியுள்ளனர். பணக்காரர்கள் வருகையால், நகரில் அனைத்து பொருட்கள் விலையும் கிடுகிடுவென உயர்ந்தது. பள்ளி, கல்லூரிகளில் கல்வி கட்டணம் பல மடங்கு எகிறியது. இதுபோன்ற காரணங்களால், பெங்களூரு முதலீடுகளை ஈர்ப்பதில் தோல்வியடையும் என்ற எதிர்பார்ப்பு பிற மாநில அரசுகளுக்கு இருந்தது.
1 பில்லியன் டாலர்
ஆனால், பெங்களூரு தனது கிளாமரை இழக்கவில்லை. சொல்லப்போனால், பெங்களூர் இன்னமும், தனது கவர்ச்சியை கூட்டிக்கொண்டுள்ளது. கடந்த 18 மாதங்களில் மட்டும், 1 பில்லியன் டாலர் அளவுக்கு பெங்களூரு முதலீடுகளை ஈர்த்துள்ளதாம். பெங்களூருவில் கிடைக்கும் பலதரப்பட்ட ஊழியர்கள் பலம், வருடம் முழுவதும் நீடிக்கும் இதமான தட்பவெப்பம் போன்றவை முதலீடுகளை ஈர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
குவியும் நிறுவனங்கள்
அமெரிக்காவின், எக்ஸோன் மொபைல் நிறுவனம், பெங்களூரில் சர்வீஸ் சென்டர் திறக்க உள்ளது, சிஎம்இ குரூப், அமெரிக்காவின் ஆடை நிறுவனம் ஜேசிபென்னி, எல் பிராண்ட்ஸ், உள்ளாடை உற்பத்தி நிறுவனமான விக்டோரியாஸ் சீக்ரெட், லோவ்ஸ் மற்றும் அமெரிக்காவின் வீட்டு உபகரண நிறுவனம் போன்றவை பெங்களூரில் தொழிலை தொடங்க உள்ள சில முக்கிய நிறுவனங்களாகும்.
ஆனால், சென்னையோ, நோகியா போன்ற ஏற்கனவே பெருமளவில் வியாபித்திருந்த நிறுவனங்களையும் இழந்து வருகிறது. பாடம் கற்குமா சென்னை?