வன்முறை... பெங்களூரு ஐடி நிறுவனங்களுக்கு ரூ. 25,000 கோடி நஷ்டமாம்.. "ஷாக்" தகவல்!
பெங்களூரு: பெங்களூரில் நடந்த வன்முறையால் 2 நாட்களாக ஐடி நிறுவனங்களை மூட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட நிலையில் தற்போது இந்த வன்முறை காரணமாக ஐடி நிறுவனங்களுக்கு கிட்டத்தட்ட ரூ. 25,000 கோடி வரை இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று அசோசம் தெரிவித்துள்ளது.
இது உத்தேச கணிப்புதான். இதை விட கூடுதலாகவும் இருக்க வாய்ப்புள்ளதாகவும் அசோசம் கூறியுள்ளது. இந்த இழப்பை ஐடி நிறுவனங்கள் எப்படி சமாளிக்கப் போகின்றன என்று தெரியவில்லை அதேசமயம், இப்படியே அடிக்கடி பந்த், வன்முறை என்று தொடர்ந்தால் ஐடி நிறுவனங்கள், பெங்களூரை விட்டு இடம் பெயரும் வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
பெங்களூருதான் இந்தியாவின் ஐடி தலைநகராக விளங்குகிறது. இங்கு இன்போசிஸ், டிசிஎஸ், விப்ரோ, எம்பசிஸ், ஆரக்கிள், டெல் என பல ஐடி நிறுவனங்கள், இ காம் நிறுவனங்கள் நிரம்பியுள்ளன. பல்வேறு சர்வதேச நிறுவனங்களும் இங்கு கடை விரித்துள்ளன. ஆனால் அத்தனை நிறுவனங்களம் காவிரிப் பிரச்சினையால் கலங்கிப் போய் நிற்கின்றன.
இந்த மாதத்தில் மட்டும் மொத்தம் நான்கு நாட்களுக்கு ஐடி நிறுவனங்களின் பணிகள் முற்றாக முடங்கிப் போயின. சம்பந்தமே இல்லாமல் செப்டம்பர் 2ம் தேதி நடந்த தொழிற்சங்கங்களின் ஸ்டிரைக்கிலும் ஐடி நிறுவனங்கள் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்டு மூட வைக்கப்பட்டன.
இப்படி அடிக்கடி பந்த், போராட்டம், வன்முறை என இந்த மாதத்தில் பலத்த சோதனைகளைச் சந்தித்து விட்டன ஐடி நிறுவனங்கள். இதுகுறித்து அசோசம் அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கர்நாடகத்தில் ஐடி துறை மிகப் பெரிய இழப்பை சந்தித்துள்ளது. இதில் பெங்களூருதான் மிகப் பெரிய பாதிப்பை சந்தித்துள்ளது. கிட்டத்தட்ட ரூ. 22,000 கோடி முதல் ரூ. 25,000 கோடி வரையிலான இழப்பை பெங்களூரு சந்தித்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது உத்தேச தொகைதான். இதை விடவும் அதிகம் இருக்க வாய்ப்புண்டு என்று அசோசம் கூறியுள்ளது.