பஞ்சாப் முன்னாள் முதல்வர் பியாந்த்சிங் கொலையாளி ஜக்தர்சிங் தாய்லாந்தில் கைது!
சண்டிகர்: பஞ்சாப் முன்னாள் முதல்வர் பியாந்த்சிங் கொலையாளியான ஜக்தர்சிங் தாய்லாந்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுகிறார். சண்டிகர் சிறையில் இருந்து 2004ஆம் ஆண்டு சுரங்கம் தோண்டி தப்பி ஓடி பரப்பை ஏற்படுத்தியவர்தான் இந்த ஜக்தர்சிங்.
பஞ்சாப் முதல்வராக இருந்த பியாந்த்சிங் 1995ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31-ந் தேதி சண்டிகரில் தலைமைச் செயலக வளாகத்தில் தற்கொலைப் படைத் தாக்குதல் மூலம் படுகொலை செய்யப்பட்டார். அவருடன் 17 பேர் உயிரிழந்தனர்.
இந்த தற்கொலைப் படைத் தாக்குதலை காலிஸ்தான் விடுதலைப் படை என்ற அமைப்பு நடத்தியது. திலாவர்சிங் என்பவர் தற்கொலைதாரியாக பியாந்த்சிங் காரின் மீது தாக்குதல் நடத்தியதும் பின்னர் தெரியவந்தது. இந்த வழக்கில் மற்றொரு தற்கொலைதாரியாக தயாராக இருந்த பல்வந்த்சிங் ரஜோனா கைது செய்யப்பட்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட இருந்த நிலையில் பஞ்சாப் மாநில அரசின் நெருக்கடியால் மத்திய அரசு இடைக்கால தடை விதித்திருக்கிறது.
இப்படுகொலை சதித்திட்டத்தில் சூத்திரதாரியான ஜக்தர்சிங்கும் கைது செய்யப்பட்டு சண்டிகரில் உள்ள புரைல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அப்போது காலிஸ்தான் விடுதலைப் படை இயக்கத்தில் ஜக்தர்சிங் இருந்தார். பின்னர் காலிஸ்தான் புலிப் படை என்ற இயக்கத்தை உருவாக்கினார்.
கடந்த 2004 ஆம் ஆண்டு சிறைக்குள்ளே கைகளாலேயே 90 அடி ஆழத்துக்கு சுரங்கம் தோண்டி அதன் வழியாக ஜக்தர்சிங், பரம்ஜித்சிங், தேவ் சிங் ஆகிய கைதிகள் சிறையில் இருந்து தப்பினர். இந்த சம்பவம் அப்போது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சிறையில் இருந்து தப்பி பாகிஸ்தானுக்கு சென்ற ஜக்தர்சிங் அந்நாட்டின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. உதவியுடன் கடந்த சில ஆண்டுகாலமாக தாய்லாந்தில் பதுங்கி இருந்தார்.
ஜக்தர்சிங் பதுங்கி இருக்கும் தகவல் தாய்லாந்து போலீசாருக்கு தெரிவிக்கப்பட அந்நாட்டு போலீசார் அவரை கைது செய்துள்ளனர். ஜக்தர்சிங் தற்போது இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுகிறார்.