புற்றுநோயால் பலியான யூடியூப் தலைவர் பஞ்சாபிகேசனை கௌரவிக்கும் இந்திய கேன்சர் சொசைட்டி
பெங்களூர்: புற்றுநோயில் இருந்து மீண்டவர்கள் மற்றும் அண்மையில் புற்றுநோய் இருப்பதை கண்டுபிடிக்கப்பட்டவர்களுக்காக பெங்களூரில் வரும் 5ம் தேதி இசை நிகழ்ச்சிக்கு இந்திய புற்றுநோய் சமூகம் ஏற்பாடு செய்துள்ளது.
ஆண்டுதோறும் ஜூன் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை புற்றுநோயை வென்றவர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இந்திய புற்றுநோய் சமூகம் வரும் 5ம் தேதி பெங்களூரில் உள்ள சவ்தையா நினைவு ஹாலில் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. மாலை 6.30 மணிக்கு துவங்கும் இந்த நிகழ்ச்சியில் பிரபல இசைக்கலைஞர்களான சிவமணி, ராகுல் சர்மா, ஸ்டீபன் தேவஸி, யு. ராஜேஷ், கிரிதர் உதூபா, பரத்வாஜ் மற்றும் சத்யஜித் தால்வாக்கர் ஆகியோர் பார்வையாளர்களை இசை மழையில் நனையவிட உள்ளனர்.
புற்றுநோயால் வாடும் ஏழை நோயாளிகளுக்கு உதவ இந்த நிகழ்ச்சி மூலம் நிதி திரட்டப்படுகிறது. இந்த நிகழ்ச்சி அண்மையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு பலியான கூகுளின் யூடியூப் பிரிவு தலைவர் வெங்கட் பஞ்சாபிகேசனை கௌரவப்படுத்தும் வகையிலும் நடத்தப்படுகிறது.
வெங்கட்டுக்கு நெருக்கமானவர்கள் பலர் புற்றுநோயாளிகளுக்கு உதவ இந்திய புற்றுநோய் சமூகத்தில் சேர்ந்துள்ளனர். இதய நோயை அடுத்து புற்றுநோய்க்கு தான் இந்தியாவில் பலர் பலியாவதாக இந்திய புற்றுநோய் சமூக தலைவர் கிஷோர் ராவ் தெரிவித்துள்ளார்.
வரும் 5ம் தேதி நடக்கும் நிகழ்ச்சியில் கிடைக்கும் நிதியை வைத்து மக்களிடையே புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், நோயை துவக்கத்திலேயே கண்டுபிடிக்க உதவும் மருத்துவ முகாம்களை இந்திய புற்றுநோய் சமூகம் நடத்த உள்ளது.
உலக அளவில் இந்தியாவில் தான் மார்பகம், கருப்பை வாய் மற்றும் வாய் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் புக் மை ஷோவில் கிடைக்கும். இது குறித்து மேலும் தகவல் அறிய 99459 99974 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது இந்தியா கேன்சர் சொசைட்டி, அதன் பேஸ்புக் தளம் ஆகிய தளங்கள் மூலம் வாங்கலாம்.