உ.பி. பிச்சைக்காரர்கள் அதிரடி... 50 பைசாவை போல் உள்ள ரூ.1 நாணயத்தை இனி வாங்க மாட்டோம் என அறிவிப்பு
உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பிச்சைக்காரர்கள் ரூ. 1 நாணயத்தை இனி வாங்க மாட்டோம் என அறிவித்துள்ளனர்.
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பிச்சைக்காரர்கள் ரூ.1 நாணயத்தை இனி வாங்க மாட்டோம் என அறிவித்து அதிரடி காட்டியுள்ளார்.
கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடிரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். கருப்பு பணத்தை ஒழிக்க இந்த நடவடிக்கை என்று மத்திய அரசு சார்பில் கூறப்பட்டது.
இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தங்களிடம் இருந்த பழைய நோட்டுகளை மாற்றுவதற்காக வங்கி வாசல்களிலும், தபால் நிலையங்களிலும் காத்திருந்தனர்.
வயோதிகர்கள் உயிரிழப்பு
வங்கி வாயில்களில் கூட்ட நெரிசலில் சிக்கிய முதியவர்கள் மாரடைப்பால் உயிரிழந்தனர். இதனால் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டது. மேலும் புதிய ரூ. 2000 அறிமுகப்படுத்தப்பட்டதால் சில்லறை தட்டுப்பாடும் நிலவியது.
ஓராண்டு நிறைவு விழா
பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்த நிலையில் அதனை எதிர்க்கட்சிகள் கருப்பு தினமாக அனுசரித்தனர். நாட்டின் பொருளாதார வீழ்ச்சி அடைந்ததாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டினர். இதுபோல் அதிக பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏற்பட்ட பாதிப்புகள் ஏராளம்.
ரூ. 1 நாணயம் செல்லாது என அறிவிப்பு
உத்தரப் பிரதேச மாநில பிச்சைக்காரர்களும் மத்திய அரசை போல் ரூ. 1 நாணயத்தை செல்லாது என்று அறிவித்து அதிரடி காட்டியுள்ளனர். ராம்பூர் மாவட்டத்தில் உள்ள பிச்சைக்காரர்கள்தான் இதுபோன்று ஒரு நடவடிக்கையை எடுத்துள்ளனர்.
விளக்கம் கூறிய பிச்சைக்காரர்கள்
இதுகுறித்து பிச்சைக்காரர்கள் கூறுகையில், பிரதமர் நரேந்திர மோடி ரூ. 500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என்று அறிவித்தது போல் தாங்களும் 50 பைசா அளவிலான ரூ 1 நாணயத்தை செல்லாது என்று அறிவித்தோம். இந்த நாணயம் சிறிய அளவில் இருப்பதால் கடைக்காரர்கள், ரிக்ஷா இழுக்கும் தொழிலாளர்கள் ரூ. 1 நாணயத்தை வாங்குவதை இல்லை. ஆனால் நாங்கள் மட்டும் ஏன் வாங்க வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.