சென்னை vs பெங்களூர்.. வெள்ள பாதிப்பை சிறப்பாக எதிர்கொண்டது எந்த நகரம்? என்ன காரணம்?
பெங்களூர்: பெங்களூரில் பெய்த மழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி மக்களை தனி தீவுகளாக்கிய காட்சி கடந்த ஆண்டு டிசம்பரில் சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தை நினைவுகூறுவதாக அமைந்திருந்தது.
இதில் கொடுமை என்னவென்றால், சென்னையை போலவே, பெங்களூரிலும் ஆக்கிரமிப்புகள்தான், இந்த பிரச்சினையில் மூல ஆதாரமாகும்.
சென்னையில் எவ்வாறு நீர்ப்பாதைகளின் ஆக்கிரமிப்புகளுக்கு அருகேயுள்ள பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டனவோ, அதைப்போலத்தான் பெங்களூரிலும், ஏரிகளுக்கு அருகேயுள்ள பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
ஏரிகள் அழிப்பு
நம்ம பெங்களூரு பவுண்டேசன் சமீபத்தில் நடத்திய ஆய்வில், 127 நீர் நிலைகள் பெங்களூரில் உள்ளது தெரியவந்தது. ஆனால் ஒரு காலத்தில் இதன் எண்ணிக்கை 262 ஆக இருந்தது. இந்த நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டு அழிக்கப்பட்டதன் விளைவாக அந்த பகுதிகளில் தற்போது நீர் தேங்கியுள்ளது.
ஏரிகள் ஆக்கிரமிப்பு
மடிவாளா, ஹூலிமாவு ஆகிய ஏரிகளை ஒட்டிய பகுதிகளில்தான் நேற்று வெள்ளம் சூழ்ந்தது. ஏரியின் பரப்பளவு குறைந்தது மற்றும் ஏரிக்கு செல்லும் நீர் வழித்தடத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டியது போன்றவை இதற்கு காரணம்.
மலைக்கும், மடுவுக்கும் உள்ள வித்தியாசம்
அதேநேரம், சென்னை அளவுக்கு பெங்களூரில் பாதிப்பு அதிகம் இல்லை. காரணம், மழை அளவு குறைவே. காரணம் சென்னை வெள்ளக்காடான தினம் இரவு தாம்பரத்தில் மட்டும் பெய்த மழை அளவு 49 செ.மீ. 3 மாதங்களில் பெய்ய வேண்டிய மழை சென்னையில் ஒரே நாளில் கொட்டி தீர்த்தது. பெங்களூரில் 4.18 செ.மீ மழை மட்டுமே பெய்தது. ஒப்பீட்டளவில் சென்னையைவிடவும் பெங்களூரால் வெள்ளத்தை எதிர்கொள்ள முடியவில்லை என்பது நிரூபணமாகியுள்ளது.
களத்தில் மக்கள் பிரதிநிதிகள்
சென்னையை போல, நீர் ஓடி கலக்க, கடல் இல்லாதது மற்றும் அதிக ஆக்கிரமிப்புகள் பெங்களூரை தத்தளிக்க செய்திருக்கலாம். அதேநேரம், சென்னையை போல பெங்களூரில் சக மக்கள் மீட்பு பணியில், உணவு வழங்கும் பணியில் ஈடுபடவில்லை. காரணம், இங்கு மக்கள் பிரதிநிதிகளான எம்.எல்.ஏக்கள், கவுன்சிலர்களே களத்தில் இறங்கி உணவு பொருட்களை வீடு வீடாக வழங்கினர்.
உதவிய கட்சியினர்
மழை வந்த ஆரம்ப தினங்களில், சென்னையில் எந்த கட்சியை சேர்ந்தவர்களும் களத்தில் இறங்காமல் பதுங்கிக் கொண்டனர். இங்கு போட்டி போட்டி எல்லா கட்சி பிரதிநிதிகளும் ஓடிச் சென்று உதவியதை பார்க்க முடிந்தது. முதல்வர் சித்தராமையா, பெல்ஜியத்தில் இருந்தாலும், அமைச்சர்களை தொலைபேசியில தொடர்பு கொண்டு மக்களை நேரில் சென்று சந்திக்க உத்தரவிட்டிருந்தார்.