இந்து -முஸ்லீம் தம்பதிக்கு ரூம் தர மறுத்த ஹோட்டல்.. தற்கொலை செய்துக்குவாங்கன்னு விதண்டாவாதம்!
கலப்பு திருமணம் செய்த இந்து - முஸ்லிம்களுக்கு பெங்களூரு ஹோட்டல் ஒன்று ரூம் வழங்க மறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு: கலப்பு திருமணம் செய்த இந்து - முஸ்லிம் தம்பதிக்கு பெங்களூரு ஹோட்டல் ஒன்று ரூம் வழங்க மறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கலப்பு திருமணம் செய்த இந்து - முஸ்லிம் தம்பதி அறையில் தூக்கில் தொங்கினால் தங்களுக்குதான் பிரச்சனை என்றும் அந்த ஹோட்டல் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
ஷபீக் சுபைதா ஹக்கிம் என்ற இளைஞர் பத்திரிக்கையாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி திவ்யா.
இந்து, இஸ்லாமிய மதங்களைச் சேர்ந்த இவர்கள் கலப்பு திருமணம் செய்துகொண்டனர். எர்ணாகுளம் அரசு சட்டக்கல்லூரியில் திவ்யா பிஹெச்டி படித்து வருகிறார்.
பெங்களூரு சென்ற தம்பதி
இந்நிலையில் திவ்யாவுக்கு பெங்களுரு நேஷனல் சட்டப்பள்ளில் நேர் காணலுக்காக அழைப்பு வந்துள்ளது. இதற்காக கணவர் ஹக்கிமுடன் நேற்று திவ்யா பெங்களூருக்கு சென்றுள்ளார்.
ஆலிவ் ரெஸிடன்ஸி ஹோட்டல்
சுதாமாநகரில் உள்ள ஆலிவ் ரெஸிடன்ஸி ஹோட்டலில் இருவரும் ரூம் கேட்டு சென்றுள்ளனர். ரூம் தருவதாக ஒப்புக்கொண்ட ஹோட்டல் ரிசெப்ஷனிஸ்ட் இருவரின் அடையாள அட்டையையும் வாங்கி பார்த்துள்ளார்.
ரூம் வழங்க மறுப்பு
அதில் இருவரும் இருவேறு மதங்களை சேர்ந்தவர்கள் என தெரியவந்ததையடுத்து இருவருக்கும் ரூம் இல்லை எனக்கூறி மறுத்துள்ளார். இந்து முஸ்லிம் சேர்ந்து வந்தால் ரூம் வழங்குவதிலலை என்றும் அந்த ரிசெப்ஷனிஸ்ட் கூறியுள்ளார்.
தூக்கு போட்டுக்கொண்டால்
மேலும் இருவரிடமும் பெரிதாக பேக்குகள் இல்லை என்று கூறிய அவர், உண்மையில் இருவரும் திருமணம் செய்து கொண்டனரா எனத் தெரியவில்லை என்றார். இருவரும் ரூமுக்கு சென்று தூக்கு போட்டுக்கொண்டால் எங்களுக்கு தான் பிரச்சனை என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்து முஸ்லிம் தம்பதிக்கு இல்லை
கிராமங்களில் இந்து - முஸ்லிம் திருமணங்கள் நடைபெறுவதில்லை என்ற அவர், தற்கொலை செய்து கொள்ளாவிட்டாலும் அவர்கள் இந்து முஸ்லீம் என்பதால் ரூம் வழங்கப்படவில்லை என்றார். இதனால் அதிர்ச்சியடைந்த ஹக்கிம் ரூம் வழங்காவிட்டால் போலீஸில் புகார் அளிப்பேன் என்றார்.
ஹோட்டல் நடவடிக்கையால் அதிர்ச்சி
ஆனால் எதற்கும் அசராத அந்த ரிசெப்ஷனிஸ்ட் ரூம் வழங்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். கலப்பு திருமணம் செய்த இந்து - முஸ்லிம் தம்பதிக்கு ஹோட்டலில் அறை வழங்க மறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.