சபரிமலை ஐயப்பன் கோயில் புதிய மேல்சாந்தியாக பெங்களூர் பூசாரி சங்கரன் நம்பூதிரி தேர்வு
பத்தனம்திட்டா: கேரளாவின் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலின் புதிய மேல்சாந்தியாக பெங்களூர் ஐயப்பன் கோயில் தலைமை பூசாரியான எஸ்.இ. சங்கரன் நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டார்.
சபரிமலை அய்யப்பன் கோவில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜை விழாக்கள் விரைவில் தொடங்க உள்ளன. விழாவுக்கு முன்னதாக அய்யப்பன் கோவில் புதிய மேல்சாந்தி தேர்வு குலுக்கல் முறையில் நடைபெறும்.
இதில் மேல்சாந்திக்கு தகுதியானவர்கள் சிலரின் பெயர்கள் துண்டு சீட்டில் எழுதி போட்டு, அந்த சீட்டுகளில் இருந்து குலுக்கல் மூலம் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கும், மாளிகைபுறம் தேவி அம்மன் கோவிலுக்கும் புதிய மேல்சாந்தி தேர்ந்தெடுக்கப்படுவர்.
இந்த ஆண்டுக்கான புதிய மேல் சாந்தி தேர்வு சபரிமலை கோவில் சிறப்பு கமிஷனர் கே.பாபு தலைமையில் சீட்டு குலுக்கல் மூலம் ஞாயிறன்று நடைபெற்றது.
மேல்சாந்திகள் பொறுப்புக்கு விண்ணப்பம் அனுப்பியவர்களில் இருந்து நேர்காணல் நடத்தி தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 14 நபர்களின் பெயர்கள் அடங்கிய சீட்டுகள் ஒரு வெள்ளிக் கிண்ணத்தில் போட்டு, தந்திரி கண்டரரு மகேஷ் மோஹனராரு கோவில் கருவறைக்குள் கொண்டு சென்றார்.
அந்த வெள்ளிக் கிண்ணத்தை, ஐயப்பன் சாமி சிலையின் முன்வைத்து சிறப்பு பூஜை செய்தார். அதைத் தொடர்ந்து, அதில் இருந்து, பந்தளம் அரண்மனையை சேர்ந்த ராஜ பிரதிநிதி அனுப்பிவைத்த சிறுவன் புதிய மேல்சாந்தியின் பெயரை குலுக்கல் முறையில் தேர்வு செய்தார்.
இதில் 8வது குலுக்கலில் சபரிமலை ஐயப்பன் கோயிலின் புதிய மேல்சாந்தியாக கோட்டயம் மன்னார்காடு எஸ்.இ.சங்கரன் நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மாளிகைப்புறத்தம்மன் கோயிலின் மேல்சாந்தியாக இ.எஸ். உன்னிகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டார்.
பெங்களூரில் உள்ள ஜாலஹள்ளி ஐயப்பன் கோயிலின் தலைமை பூசாரியாக சங்கரன் நம்பூதிரி 4 ஆண்டுகளாக இருந்து வருகிறார். தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய மேல்சாந்திகள் அடுத்த மாதம் 17-ந் தேதி பிறக்கும் மலையாள மாதமான விரிஸ்ச்சிகோம் தொடங்கிய பின்னர் பதவியேற்பர்.