கேரளாவில் பந்த்: போக்குவரத்து நிறுத்தம்- ஐயப்ப பக்தர்கள் வாகனங்களுக்கு மட்டும் அனுமதி
மத்திய அரசைக் கண்டித்து கேரளாவில் நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்தால் தமிழக வாகனங்கள் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன. ஐயப்ப பக்தர்களின் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.
திருவனந்தபுரம்: மத்திய அரசின் ரூபாய் நோட்டு தடை உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் சார்பில் கடை அடைப்பு போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. கேரளாவில் நடைபெறும் போராட்டத்தினால் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
கடந்த 8ம் தேதி பிரதமர் மோடி நாடு முழுவதும் புழக்கத்தில் உள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை வெளியிட்டார். அதற்கு பதிலாக புதிதாக அச்சடிக்கப்பட்ட புது 2000 ரூபாய் நோட்டு புழக்கத்திற்கு வரும் என்றும், விரைவில் புது 500 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்படும் என்றும் கூறினார். அதன்படி 8ம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் ரூபாய் நோட்டு தடை நாடு முழுவதும் அமலுக்கு வந்தது. அதன்படி ஒரு நாளைக்கு, அதாவது நவம்பர் 9ம் தேதி வங்கி செயல்படாது என்றும், இரண்டு நாட்களுக்கு ஏடிஎம் செயல்படாது என்றும் அறிவிப்பு வெளியானது
நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடியின் இந்த நடவடிக்கையை கடுமையாக எதிர்த்தன. அரசியல் கட்சிகள் மட்டுமல்லாமல் சமூக ஆர்வலர்களும், பொருளாதார நிபுணர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஒரு தரப்பினர் ஆதரவும், மற்றொரு தரப்பினர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
ரூபாய் நோட்டு தடை அமல்படுத்தப்பட்டு 20 நாட்கள் ஆன பின்பும் இயல்பு நிலை திரும்பவில்லை என்றும், இன்னமும் மக்கள் கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. அதனால் நவம்பர் 28ம் தேதி நாடு தழுவிய போராட்டம் நடைபெறும் என்று அறிவித்திருந்தனர்.
கேரளாவில் முழு அடைப்பு
இடதுசாரி கட்சி ஆளும் கேரள மாநிலத்தில் முழு அடைப்பு போராட்டம் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இடதுசாரிகள் விடுத்த போராட்ட அழைப்பை ஏற்று கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. இன்று நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. கடைகள், உணவகங்கள் முற்றிலும் அடைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் இருந்து செல்லும் வாகனங்கள் குமரி மாவட்ட எல்லையிலும், தென்காசி வழியாக செல்லும் வாகனங்கள் புளியரை அருகே எல்லையிலும் நிறுத்தப்பட்டுள்ளன. இதேபோல கோவை மாவட்டம் வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் தமிழக எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன. காய்கறிகள், சரக்கு வாகனங்கள் அனைத்தும் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன. அதே நேரத்தில் ஐயப்ப பக்தர்களின் வாகனங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுவதால் பக்தர்கள் நிம்மதியடைந்துள்ளனர். அரசு மற்றும் தனியார் பேருந்துகள் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளன.