பீகார்: லஞ்சப் புகாரில் சிக்கிய 576 அதிகாரிகளை நீக்க நிதிஷ்குமார் முடிவு
பாட்னா: பீகாரில் ஊழலை ஒழிக்க உறுதி பூண்டு செயல் பட்டு வரும் அம்மாநில முதல்வர் நிதீஷ்குமார் அதன் முதல்கட்டமாக, ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான 576 அதிகாரிகளை அதிரடியாக நீக்க முடிவு செய்துள்ளார்.
டெல்லியில் புதிதாக பதவியேற்றுள்ள ஆம் ஆத்மி கட்சி ஊழல் குறித்தான குற்றச்சாட்டுக்களைத் தெரிவிக்க இலவச தொலைபேசி எண்ணை அறிமுகப் படுத்தி, அதன் மூலம் ஊழல் அதிகாரிகளை களை எடுத்து வருகிறது.
அதேபோல், தற்போது பீகாரிலும் ஊழலை ஒழிக்க அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் அம்மாநில முதல்வர் நிதீஷ்முமார். அதன் முதல் கட்டமாக, ஊழல் குற்றம் சாட்டப்பட்டுள்ள 576 அதிகாரிகளையும் அதிரடியாக நீக்க அவர் முடிவு செய்துள்ளார். இவர்களில் 187 பேர் மீது இலாகா பூர்வ நடவடிக்கை மட்டுமே எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக அவர் மாநில தலைமை செயலாளர் ஏ.கே.சின்கா, மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து இன்னும் ஒரு வாரத்தில் 576 அதிகாரிகளும் பதவி நீக்கம் செய்யப்படுகிறார்கள். இதற்கான இறுதிக்கட்ட பணிகள் முடிந்ததும் படிப் படியாக அனைவரும் நீக்கப்படுவார்கள்.
மேலும் அரசு அலுவலகங்களில் அனைத்து மட்டங்களிலும் ஊழலை ஒழிக்கவும் நிதிஷ்குமார் நடவடிக்கை எடுத்துள்ளார். இது தொடர்பாக அனைத்து மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு தலைமை செயலாளர் மூலம் அதிரடி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், இவர்களுடன் தலைமை செயலாளர் வாரந்தோறும் ஒவ்வொரு துறை அதிகாரிகளுடனும் இது சம்பந்தமாக ஆலோசனை கூட்டங்கள் நடத்தவும் நிதிஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
பீகாரில் வட்டார வளர்ச்சி அதிகாரிகள், தாலுகா அதிகாரிகள் மீதுதான் அதிக அளவில் லஞ்சப் புகார்கள் வருவதாகவும், இதில் சிலர் சிக்கிக் கொள்கிறார்கள். பலர் தப்பித்து விடுகிறார்கள் எனவும் தெரிவித்துள்ள தலைமைச் செயலாளார், இனி இது போன்ற அதிகாரிகள் உடனடியாக இடமாற்றம் செய்யப்படுவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.
இதே போல் போலீஸ் துறையிலும் லஞ்சத்தை தீவிரமாக கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இனி பீகாரில் அரசு அதிகாரிகள், போலீசார் லஞ்ச ஊழலில் சிக்கினால் அவர்கள் உடனடியாக டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள் என்றும் தலைமைச் செயலாளர் கூறியுள்ளார்.