பீகார்: அமைதியாக நடந்த முதல் கட்ட சட்டசபை தேர்தல்- 57% வாக்குப் பதிவு!
பாட்னா: பீகாரில் முதல் கட்ட சட்டசபை தேர்தல் இன்று அமைதியாக நடைபெற்று முடிவடைந்தது. 49 தொகுதிகளுக்கு நடைபெற்ற இத்தேர்தலில் 57% வாக்குகள் பதிவாகி இருந்தன.
பீகாரில் 243 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இன்று தேர்தல் இன்று முதல் நவம்பர் 5-ந் தேதி வரை 5 கட்டங்களாக நடைபெறுகிறது. நவம்பர் 8-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
ஆளும் ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான கூட்டணி, பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணி இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது.
இன்றைய முதல் கட்ட தேர்தலில் 10 மாவட்டங்களில் உள்ள 49 தொகுதிகளில் 583 வேட்பாளர்கள் களத்தில் நின்றனர். அவர்களில் 54 பேர் பெண் வேட்பாளர்கள். தேர்தலில் வாக்களிக்கும் தகுதியை சுமார் 1,35,72,339 பேர் பெற்றவர்கள். அவர்களில் 72,37,253 பேர் ஆடவர்கள்; 63,17,602 பேர் பெண்கள். 405 பேர் மூன்றாம் பாலினத்தவர்.
பெரும்பாலான தொகுதிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 5 மணிவரை நடைபெற்றது. நக்ஸலைட் ஆதிக்கம் உள்ள சில இடங்களில் மட்டும் சட்டம்-ஒழுங்கு நிலையை கவனத்தில் கொண்டு மாலை 3 மற்றும் 4 மணி வரை வாக்குப் பதிவு நடைபெற்றது.
இன்று வாக்குப் பதிவு நடைபெற்ற 13,212 வாக்குச் சாவடிகளிலும் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் ஆயுதம் ஏந்திய மத்திய துணை ராணுவப் படை வீரர்கள் நிறுத்தப்பட்டனர்.
இன்று காலை வாக்குப் பதிவு தொடங்கிய சில மணிநேரங்களில் 13% பேர் வாக்களித்திருந்தனர். முற்பகல் 11 மணியளவில் இது 28% ஆக அதிகரித்திருந்தது.
மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ள ஜமோய் பகுதியி மாலை 3 மணியுடன் வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டது. மொத்தமாக மாலை 3 மணிவரை 49% வாக்குகள் பதிவாகி இருந்தன.
பின்னர் மாலை 5 மணியுடன் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டது. இன்றைய தேர்தலில் 57% வாக்குகள் பதிவாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.