பிரதமரின் வானொலி உரைக்கு நிபந்தனையுடன் தேர்தல் ஆணையம் அனுமதி
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் வானொலி உரைக்கு 'நிபந்தனையுடன்' தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து நாளை பிரதமர் மோடி வானொலியில் உரையாற்ற உள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களுடன் மாதம் ஒரு முறை வானொலி மூலமாக ஆற்றி வருகிற மன் கி பாத் உரைக்கு, பீகார் சட்டசபை தேர்தலையொட்டி தடை விதிக்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. இந்த கோரிக்கை குறித்து பரிசீலிப்பதாக தேர்தல் ஆணையம் கூறியது.
இந்த நிலையில் பிரதமர் மோடி நாளை வானொலியில் பேசுவது தொடர்பாக தேர்தல் ஆணையத்தை மத்திய தகவல், ஒலிபரப்புத்துறை அமைச்சகம் நாடியது.
இதையடுத்து பிரதமர் மோடி நாளை வானொலியில் பேசுவதற்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளித்தது.
அதே நேரத்தில், பீகார் சட்டசபை தேர்தலையொட்டி வாக்காளர்களை தூண்டி விடாத வகையிலும், தாக்கத்தை ஏற்படுத்தாத வகையிலும் பிரதமரின் உரை இருக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளது.