பீகார் சட்டசபை தேர்தல்- 17% முஸ்லிம் வாக்குகள் யாருக்கு செல்லும்?
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும் 17% முஸ்லிம் வாக்குகள் எந்த அணிக்கு செல்லும் என்பதை தீர்மானிக்க முடியாத நிலை உள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பீகார் சட்டசபைக்கு அக்டோபர் 12-ந் தேதி முதல் நவம்பர் 5-ந் தேதி வரை 5 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் ஆகியவை மெகா கூட்டணியை அமைத்துள்ளன.
பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், லோக் ஜனசக்தி, ராஷ்டிரிய லோக் சமதா கட்சி மற்றும் அவாமி மோர்ச்சா ஆகியவை இடம்பெற்றுள்ளன.
17% முஸ்லிம் வாக்குகள்
பீகாரில் முஸ்லிம்கள் வாக்கு 17% இருக்கிறது. இந்த வாக்குகளே சட்டசபை தேர்தலில் தீர்மானிக்கும் சக்தியாக உள்ளது. பீகாரில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகியவை கூட்டணி கட்சியாக இருந்தாலும் கூட முஸ்லிம் வாக்குகளை கைப்பற்றுவதற்காக முனைப்புடன் இருக்கின்றன.
யாருக்கு போகும்?
அதே நேரத்தில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும் முஸ்லிம் வாக்குகளை அப்படியே கைவிட்டுவிட விரும்பவில்லை. பா.ஜ.க.வைப் பொறுத்தவரை ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம் இரண்டையும் விரும்பாத முஸ்லிம் வாக்குகள் தங்களுக்கே வந்து சேரும் என்றும் கருதுகிறது.
அரசியல் பார்வையாளர்களைப் பொறுத்தவரையில் இத்தேர்தலில் முஸ்லிம் வாக்குகள் எந்த அணிக்கு செல்லும் என்பதை உறுதியாக சொல்ல முடியாது என்கின்றனர். 1990களில் லாலு பிரசாத் யாதவ் மீது முஸ்லிம்கள் பெரும் நம்பிக்கை வைத்து வாக்களித்தனர். அதன் பின்னர் நிதிஷ்குமாருக்கு அவர்கள் வாக்களித்தனர். இத்தனைக்கும் கடந்த தேர்தலில் பா.ஜ.க.வுடன் நிதிஷ்குமார் கூட்டணி அமைத்த போதும்கூட முஸ்லிம்கள் அவரையே ஆதரித்தனர்.
ஆர்.எஸ்.எஸ். ஆதரவு முஸ்லிம் அமைப்பு
அத்துடன் இந்த தேர்தலில் ஆர்.எஸ்.எஸ். ஆதரவுடன் உருவாக்கப்பட்டுள்ள முஸ்லிம் ராஷ்டிரிய மஞ்ச் என்ற அமைப்பு முஸ்லிம் வாக்குகளை தங்களுக்கு கொண்டு சேர்க்கும் என்பதும் பா.ஜ.க.வின் எதிர்பார்ப்பு.
பா.ஜ.க. மும்முரம்
முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் எந்த கட்சி என்று பார்க்காமல் வளர்ச்சிக்குத்தான் வாக்களிப்பார்கள் என்கிறது பா.ஜ.க. ஆகையால் 30% முஸ்லிம் மக்கள் தொகை உள்ள கோசி, புருனியா, பகல்பூர் மற்றும் கிஷன்கஞ்ச் பகுதிகளில் வாக்கு வேட்டையில் பா.ஜ.க. மும்முரம் காட்டி வருகிறது.
2014ஆம் ஆண்டு
கடந்த 2014ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது முஸ்லிம்கள் வாக்கு யாருக்கு சென்றுள்ளது என்று சி.எஸ்.டி.எஸ். லோக்நிதி இணைந்து நடத்திய ஆய்வில் 60% பேர் ராஷ்டிரிய ஜனதா தளம்- காங்கிரஸ் அணிக்கும் 21% பேர் ஐக்கிய ஜனதா தளத்துக்கும் வாக்களித்திருந்தனர். முஸ்லிம்கள் பெருமளவு பா.ஜ.க.வை நிராகரித்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.