ஒடிஷா பிஜேபூர் சட்டசபை தொகுதி இடைத் தேர்தலில் பிஜூ ஜனதா தளம் அமோக வெற்றி
புவனேஷ்வர்: ஒடிஷா மாநிலம் பிஜேபூர் சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலில் ஆளும் பிஜூ ஜனதா தளம் அமோக வெற்றியைப் பெற்றது.
பிஜேபூர் எம்.எல்.ஏ.வாக இருந்த சுபால் ஷாகு கடந்த ஆண்டு காலமானார். இதைத் தொடர்ந்து சுபால் ஷாகுவின் மனைவி ரிதா ஷாகு பிஜூ ஜனதா தளத்தில் இணைந்தார். அவரையே அக்கட்சி இடைத் தேர்தல் வேட்பாளராக்கியது.

ரிதா ஷாகுவை எதிர்த்து பாஜக, காங்கிரஸ் உட்பட 13 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இருப்பினும் பிஜூ ஜனதா தளம், பாஜக, காங்கிரஸ் இடையே மும்முனைப் போட்டி நிலவியது.
இத்தேர்தலில் ஆளும் பிஜூ ஜனதா தளத்துக்கு ஆதரவாக ஐஏஎஸ் அதிகாரியும் ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக்கின் தனி செயலாளருமான தமிழகத்தைச் சேர்ந்த கார்த்திகேய பாண்டியன் செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்தன. அத்துடன் கார்த்திகேய பாண்டியன் வீட்டையும் பாஜகவின் சூறையாடினர். மேலும் பிரசாரத்தின் போது நவீன் பட்நாயக் மீது ஷூவும் வீசப்பட்டது.
இந்நிலையில் பிப்ரவரி 24-ந் தேதியன்று பிஜேபூர் தொகுதி இடைத் தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. மொத்தம் 21 சுற்று வாக்குகள் எண்ணப்பட்டன. பிஜூ ஜனதா தளத்தின் ரிதா ஷாகு 1,02,871 வாக்குகள் பெற்றார்.
அவருக்கு அடுத்ததாக பாஜகவின் அசோக் பனிக்கிராய் 60,938 வாக்குகளையும் காங்கிரஸ் வேட்பாளர் பிரனய ஷாகு 10274 வாக்குகளும் பெற்றனர். 41933 வாக்குகள் வித்தியாசத்தில் பிஜூ ஜனதா தளம் வேட்பாளர் அமோக வெற்றி பெற்றுள்ளதற்கு அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications