71 தொகுதிகளை ஜெயிச்ச உ.பி.யிலேயே சறுக்கிய பாஜக.. அப்போ 2019 தேர்தலில் என்னவாகும்?
உத்திரபிரதேச மாநிலத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் 71 இடங்களை வென்ற பாஜகவிற்கே சங்குஊதியுள்ளனர் மக்கள்.
Recommended Video
டெல்லி/லக்னோ : உத்திரபிரதேச மாநிலத்தில் 2014 நாடாளுமன்ற தேர்தலில் 71 தொகுதிகளை வென்ற பாஜகவிற்கு 2018ல் நடந்த லோக்சபா இடைத்தேர்தலில் தோல்வியை பரிசளித்துள்ளனர் மக்கள். இடைத்தேர்தலிலேயே இப்படி என்றால் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பொதுத்தேர்தலில் பிரதமர் மோடி அலை இல்லையா என்ற கேள்வியை எழுப்பியுள்ளன தேர்தல் முடிவுகள்.
2014 நாடாளுமன்றத் தேர்தலில் மத்தியில் பாஜக ஆட்சி அமைத்தது முதல் அந்தக் கட்சியினர் சொல்லி வந்த விஷயம் நாடு முழுவதும் மோடி அலை பரவுகிறது என்பது தான். மத்தியில் பாஜக ஆட்சி அமைக்க மற்றொரு முக்கிய காரணமாக இருந்தது உத்திரபிரதேச மாநிலத்தில் அதிக தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது.
2014 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக 71 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதற்கு முன்னர் 1998ல் தேசிய ஜனநாயகக் கூட்டணி இந்த மாநிலத்தில் 58 இடங்களைக் கைப்பற்றியது, அப்போது கட்சியின் தலைவராக வாஜ்பாய் இருந்தார். இந்த வெற்றியின் மூலமே 1998ல் மத்தியில் பாஜக ஆட்சியை பிடித்தது. எனவே மத்தியில் ஆட்சி அமைக்கப் போகும் கட்சி எது என்பதை தீர்மானிக்கும் மாநிலமாக உத்திரபிரதேசம் இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக பாஜக மத்தியில் ஆட்சியை பிடிக்குமா என்பதற்கான விடையை தன்னகத்தே வைத்துள்ளது இந்த மாநிலம் என்றும் சொல்லலாம்.
காங்கிரஸ் நிலை எப்படி?
காங்கிரஸ் கட்சி அதிகபட்சமாக 2009 தேர்தலில் 22 இடங்களை வென்றுள்ளது. 2014 தேர்தலில் ரேபரேலி மற்றும் அமேதி தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றது. ரேபரேலி தொகுதியில் சோனியாகாந்தியும், அமேதியில் ராகுல்காந்தியும் வெற்றி பெற்றனர்.
2014 கட்சிகளின் நிலவரம்
பாஜகவின் கூட்டணி கட்சியான அப்னா தலம் கட்சி இரண்டு இடங்களில் வென்றது. மாநிலக் கட்சியான சமாஜ்வாதி கட்சியில் முலாயம் சிங்யாதவின் குடும்பத்தினர் போட்டியிட்ட 5 தொகுதிகளில் மட்டும் வெற்றி கிடைத்தது. மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி படுதோல்வியை சந்தித்தது.
வெற்றியை மட்டுமே ருசித்த பாஜக
2014 முதல் நாடு முழுவதும் நடைபெறும் சட்டசபை தேர்தல்களில் பாஜகவின் கை ஓங்கியே வருகிறது. நாட்டில் 20 மாநிலங்களில் காவிக்கொடி பறக்கிறது. இதனால் வெற்றி களிப்பில் இருந்த பாஜகவிற்கு உத்திரபிரதேச லோக்சபா இடைத்தேர்தல் அதிர்ச்சியை தந்திருக்கிறது. 71 தொகுதியை ஜெயித்த மாநிலத்திலேயே 2 தொகுதிகளில் தோல்வியை பரிசளித்துள்ளனர் மக்கள்.
2019ல் மோடி அலை இல்லையா?
பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி உள்ளிட்ட விஷயங்களால் மக்கள் அதிருப்தியில் இருப்பதற்கான வெளிப்பாடா தேர்தல் முடிவுகள், பாஜகவின் சறுக்கலுக்கான ஆரம்பமாகக் கூட இதனை பார்க்க முடிவதாக கூறுகின்றனர் அரசியல் நோக்கர்கள். அப்படியானால் 2019ல் மோடி அலை வொர்க் அவுட் ஆகுமா ஆகாதா, மீண்டும் மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி அமையுமா என பலகேள்விகள் எழுந்துள்ளன.