"கட்சியில் இணையாததால் கங்குலியை பாஜக அவமானப்படுத்துகிறது" திரிணாமுல் காங்கிரஸ் பரபர குற்றச்சாட்டு!
கொல்கத்தா: பாஜகவில் இணையாததால் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியை பாஜக அவமானப்படுத்துகிறது என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் மாதம் பிசிசிஐ-யின் தலைவராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலியும், செயலாளராக மத்திய அமைச்சர் அமித் ஷா மகனான ஜெய் ஷாவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதனைத்தொடர்ந்து பிசிசிஐ விதிகளில் திருத்தம் செய்துகொள்ள உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியதையடுத்து, கங்குலி மற்றும் ஜெய் ஷா ஆகியோர் தங்களின் பதவிகளில் 3 ஆண்டுகள் பணியாற்றும் வாய்ப்பு உருவாகியது.

பிசிசிஐ தேர்தல்
இந்த நிலையில் பிசிசிஐ தலைவராக உள்ள கங்குலி மற்றும் செயலாளராக உள்ள ஜெய் ஷா ஆகியோரின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் முடிவடைய உள்ளதால், தேர்தல் பணிகளை பிசிசிஐ தொடங்கியுள்ளது. தேர்தலில் போட்டியிட விரும்புவோர் அக்.11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் வேட்புமனுவை தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டு

ரோஜர் பின்னி மனுதாக்கல்
இதனிடையே 1983ம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியின் ஆல் ரவுண்டரான ரோஜர் பின்னியின் பிசிசிஐ தலைவருக்கான தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அதேபோல் ஜெய் ஷாவும் செயலாளராக தொடர முடிவு செய்து வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இவர்கள் தவிர்த்து வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாத பட்சத்தில், ஒருமனதாக இவர்கள் தேர்வு செய்ய வாய்ப்புகள் உள்ளது.

பாஜக மீது குற்றச்சாட்டு
இந்த நிலையில் பாஜகவில் கங்குலி இணையாததால் இரண்டாவது முறையாக அவருக்கு பிசிசிஐ தலைவர் பதவியை வழங்காமல் அக்கட்சி அவமானப்படுத்துவதாக திரிணாமுல் காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது. இதுகுறித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் குணால் கோஷ் கூறுகையில், கடந்த ஆண்டு மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலுக்கு முன், சவுரவ் கங்குலி பாஜகவில் இணைவார் என்ற தகவலை பாஜக மக்கள் மத்தியில் பரப்ப முயற்சித்தது.

திரிணாமுல் காங்கிரஸ் கேள்வி
கடந்த மே மாதம் கங்குலி வீட்டிற்கு சென்ற மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இரவு உணவு சாப்பிட்டதை குறிப்பிட்ட குணால் கோஷ், கங்குலி பாஜகவில் சேராதததால் அவரை அக்கட்சி அரசியல் ரீதியாக அவமானப்படுத்த முயற்சிப்பது வெளிப்படையாக தெரிகிறது. ஜெய்ஷா இரண்டாவது முறையாக பிசிசிஐ செயலாளராக ஆகும் போது கங்குலி ஏன் பிசிசிஐ தலைவராக 2வது முறையாக தேர்ந்தெடுக்க முடியாது என்று கேள்வி எழுப்பினார்.

பாஜக விளக்கம்
இதற்கு பாஜக தரப்பில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றவை. சவுரவ் கங்குலியை ஒருபோதும் கட்சியில் சேர்க்க பாஜக முயற்சிக்கவில்லை என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஐசிசி தலைவர் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், அதில் போட்டியிடுவதற்காகவே கங்குலி மீண்டும் பிசிசிஐ தலைவர் தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications