வெளிநாட்டில் மோடி: அரசில் நம்பர் 2 ராஜ்நாத் சிங்கா? அருண் ஜேட்லியா?
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி அரசில் 2வது இடம் ராஜ்நாத்சிங்குக்கு? அருண்ஜேட்லிக்கா? என்ற புதிருக்கு விடை கிடைத்தபாடில்லைதான்..
பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற போது அவருக்கு அடுத்தபடியாக ராஜ்நாத்சிங் மத்திய அமைச்சராக பொறுப்பேற்றார். அதனால் அவர்தான் மோடிக்கு அடுத்த இடத்துக்குரியவர் என கருதப்பட்டது.
மூன்று துறைகள் ஒதுக்கீடு
ஆனால் இலாகா ஒதுக்கீட்டில் ராஜ்நாத்சிங்குக்கு உள்துறை மட்டுமே ஒதுக்கப்பட்டது. நிதி, பாதுகாப்பு, கம்பெனி விவகாரங்கள் என மூன்று துறைகள் ஒதுக்கப்பட்டன. இதனால் அருண்ஜேட்லிதான் மோடிக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் என்று ஒருதரப்பு கூறியது.
பார்லி தலைவராக மோடி
இதை ராஜ்நாத்சிங் ஆதரவாளர்கள் ஏற்க மறுத்தனர். இந்த நிலையில் பாரதிய ஜனதாவின் நாடாளுமன்ற குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற குழு தலைவராக பிரதமர் மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ராஜ்நாத்சிங்- ஜேட்லி
லோக்சபாவில் துணைத் தலைவராக ராஜ்நாத்சிங்கும், ராஜ்யசபாவில் துணைத் தலைவராக அருண்ஜேட்லியும் நியமிக்கப்பட அந்த 2வது இடத்துக்கான புதிரும் நீண்டு கொண்டிருந்தது.
வெளிநாடு சென்ற பிரதமர்
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பிரேசிலுக்கு சென்றுள்ளார். பிரதமர் வெளிநாடு சென்றுள்ள நிலையில், 'ராஜ்நாத்சிங்கைதான் கேபினட்டுக்கு தலைமை தாங்குமாறு மோடி கேட்டுக் கொண்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இதை அருண்ஜேட்லி ஆதரவாளர்கள் நிராகரித்துவிட்டனர்.
இருவரையும்தான்..
ராஜ்நாத் மற்றும் ஜேட்லி இருவரையும்தான் தாம் வரும் வரை வெளிநாட்டுக்குப் போக வேண்டாம் என்று மோடி கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.
பட்டும் படாமலும்
இதனிடையே டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவதேகர், பிரதமர், உள்துறை அமைச்சர், நிதி அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர் என அனைவரும் இருக்கிறார்கள் என்று பொத்தாம் பொதுவாக கூறினாரே தவிர யார் கேபினட்டில் சீனியர் என்பதைக் கூறவில்லை.
தொடரும் புதிர்
இதனால் மோடி அரசில் 2வது இடம் ராஜ்நாத்சிங்குக்கா? அருண்ஜேட்லிக்கா என்ற புதிர் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.