மேற்கு வங்கத்தில் வன்முறையை தூண்டும் போலி கலவர புகைப்படங்களை நீக்க பாஜக பிரமுகர்கள் மறுப்பு!
மேற்கு வங்க மாநிலத்தில் போலி கலவர புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்க பாஜக மறுத்து வருவதாக சர்ச்சை எழுந்துள்ளது.
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் கலவரம் நடப்பதாக பரவும் போலி புகைப்படங்களை நீக்க பாஜக தரப்பினர் பிடிவாதம் பிடித்து வருவதாக சர்ச்சை எழுந்துள்ளது.
கடந்த சில நாட்களாக, மேற்கு வங்கத்தில் உள்ள நார்த் 24 பர்கானாஸ் போன்ற பகுதிகளில், முஸ்லீம்கள், இந்து மக்கள் மீது கலவரம் செய்து, தாக்குதல் நடத்துவதாக, சமூக ஊடகங்களில் செய்தி பரவுகிறது. அதே நேரத்தில், சமூக ஊடகங்களில் பெண்களை மானபங்கம் செய்வது போன்றும், பாலியல் அத்துமீறல் செய்வது போன்றும் சில புகைப்படங்கள், தொடர்ந்து பகிரப்படுகின்றன. இவை போஜ்பூரி சினிமா படங்கள் மற்றும் வங்கதேசத்தில் நடைபெற்ற கலவர காட்சிகளில் இருந்து திருடப்பட்டதாக, தற்போது உண்மை தெரியவந்துள்ளது.
இந்த தகவலை செய்தியாளர்களிடையே வெளியிட்ட, அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, கலவரம் நடந்ததாகக் கூறப்படுவதற்கு, முற்றிலும் தொடர்பில்லாத புகைப்படங்களை பாஜக போன்ற சில அரசியல் கட்சிகள் திட்டமிட்டு பரப்பி வருவதாக, குற்றம் சாட்டினார்.
போஜ்பூரி படங்களில் இருந்து சில காட்சிகளையும், வங்கதேசத்தில் உள்ள கோமில்லா பகுதியில் நிகழ்ந்த வன்முறை காட்சிகளையும் உருவி, மேற்கு வங்கத்தில் நடந்ததைப் போல, இந்த அரசியல் கட்சிகள் சித்தரிக்க தொடங்கியுள்ளன. இதனை ஃபேஸ்புக்கில் அதிகம் பேர் பகிர்ந்து வருகின்றனர். இதில், துளியும் உண்மையில்லை என்றும் மம்தா பானர்ஜி குறிப்பிட்டார்.
எனினும், இந்த புகைப்படங்களை ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் இருந்து நீக்கும் பணிகளை, பாஜக தரப்பு இதுவரை மேற்கொள்ளவில்லை. அதுபற்றி கண்டும், காணாமல் பாஜக தலைவர்கள் செயல்படுவதாகவும் மேற்கு வங்கத்தில் அதிருப்தி எழுந்துள்ளது.