மமதா வென்ற பவானிப்பூர் தொகுதியில்... 5 மாதங்களில் 50% வாக்குகளை பறிகொடுத்து படுதோல்வி அடைந்த பா.ஜ.க.
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் 5 மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பவானிப்பூர் தொகுதியில் 50% வாக்குகளை இடைத்தேர்தலில் பறிகொடுத்து பாஜக படுதோல்வி அடைந்துள்ளது அக்கட்சியினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி போட்டியிட்டார். அவரை எதிர்த்து அவரது மாஜி தளபதியான சுவேந்து அதிகாரி, பாஜக வேட்பாளராகப் போட்டியிட்டார்.
வாக்கு எண்ணிக்கையின் போது மமதா பானர்ஜி தொடர்ந்து முன்னிலை வகித்தார். ஒரு கட்டத்தில் மமதா பானர்ஜி வெற்றி பெற்றதாக கூறப்பட்டது. ஆனால் திடீரென 2,000 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவின் சுவேந்து அதிகாரி வென்றதாக அதிகாரிகள் அறிவித்தனர்.
மமதா பானர்ஜி போட்டியிடும் பவானிப்பூர் தொகுதி இடைத்தேர்தலில் வாக்குப் பதிவு தொடக்கம்-பலத்த பாதுகாப்பு
நெருக்கடியில் மமதா
இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தாம் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து மமதா பானர்ஜி வழக்கு தொடர்ந்தார். சட்டசபைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை எம்.எல்.ஏக்களைப் பெற்றது. இதனையடுத்து மாநில முதல்வராக மூன்றாவது முறையாக மமதா பானர்ஜி பதவியேற்றார். அதேநேரத்தில் 6 மாதங்களுக்குள் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டால்தான் அவரால் முதல்வர் பதவியைத் தக்க வைக்க முடியும் என்ற நெருக்கடி இருந்தது.
பவானிப்பூர் இடைத் தேர்தல்
கொரோனா பரவல் அதிகரித்திருந்த நிலையில் மமதா பானர்ஜி தேர்தலில் போட்டியிட இடைத்தேர்தல் நடக்குமா? என்ற கேள்விக் குறியும் எழுந்தது. அந்நிலையில் பவானிப்பூர் தொகுதி திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. சோபன்தேவ் சட்டோபாத்யா எம்.ஏல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இத்தொகுதியில் மமதா பானர்ஜி களமிறங்கினார். அவருக்கு எதிராக பாஜகவின் பிரியங்கா போட்டியிட்டார். மார்க்சிஸ்ட் கட்சியும் இத்தொகுதியில் வேட்பாளரை களமிறக்கியது. இடைத்தேர்தல் என்ற நிலையைத் தாண்டி பிரசாரம் அனல் பறந்தது.
50% வாக்குகள் காணோம்
இந்நிலையில் நேற்று காலை வாக்குகள் எண்ணப்பட்டது முதலே மமதா பானர்ஜி மிகப் பெரிய அளவிலான வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வந்தார். மமதா பானர்ஜி மொத்தம் 85.263 வாக்குகளைப் பெற்று (71.2%) அமோகமாக வென்றார். பாஜகவின் பிரியங்காவுக்கு வெறும் 26,428 வாக்குகள் (22.3%)தான் கிடைத்தன. மேற்கு வங்கத்தை கோட்டையாக கட்டி ஆண்ட மார்க்சிஸ்ட் கட்சிக்கு 4,226 வாக்குகள் அதாவது 3.6% வாக்குகளே கிடைத்தன. 5 மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற தேர்தலில் இதே பவானிப்பூர் தொகுதியில் சுமார் 50,000 வாக்குகளைப் பெற்றிருந்தது பாஜக. இப்போது இந்த வாக்குகளில் 50%-த்தை அப்படியே பறிகொடுத்துள்ளது பாஜக. இதுதான் பாஜகவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
மமதாவின் வியூகம்
மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலில் பாஜகவை வங்காளிகள் அல்லாதவர் என முத்திரை குத்தி பிரசாரம் செய்தது திரிணாமுல் காங்கிரஸ். வங்காளி வாக்காளர்களிடையே இது ஒர்க் அவுட் ஆனதால் அதிக இடங்களை அக்கட்சியால் பெற முடிந்தது. ஆனால் பவானிப்பூர் தொகுதியானது பிற மாநிலத்தவரை அதிக வாக்காளர்களாகக் கொண்ட தொகுதி. மார்வாடிகள், குஜராத்திகள், பஞ்சாபிகள், பீகாரிகள் என பல்வேறு மாநிலத்தவர் பெரும்பான்மையாக இருக்கும் தொகுதி. அதனால் இத்தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் தடுமாறியது. ஆனால் தற்போதைய இடைத்தேர்தலின் போது மமதா பானர்ஜி நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார். பவானிப்பூர் தொகுதியை ஒரு மினி இந்தியா என புகழ்ந்து தள்ளினார். சீக்கியர்களின் குருத்வாராவுக்கு சென்று வழிபாடு நடத்தினார். மூன்றாவது முறையாக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த மமதா பானர்ஜி, கிராம-நகர்ப்புற ஏழைகளுக்கான அனைத்து வளர்ச்சித் திட்டங்களையும் தொடரச் செய்தார். இவை எல்லாமும் இடைத்தேர்தலில் மமதாவுக்கு பிரமாண்ட வெற்றியைத் தந்திருக்கிறது.
பாஜகவுக்கு ஏன் பின்னடைவு?
பாஜகவைப் பொறுத்தவரை பவானிப்பூர் தொகுதியில் முழு வீச்சை காட்ட தவறிவிட்டது என்பதையே தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. குறிப்பாக இடைத்தேர்தல் பிரசாரம் நடந்து கொண்டிருந்த போது மாநில பாஜக தலைவர் பதவியில் இருந்து திலீப் கோஷை தூக்கியடித்தது உள்ளிட்டவை அக்கட்சிக்கு பின்னடைவைக் கொடுத்திருக்கிறது எனக் கூறப்படுகிறது.
நாடு முழுவதும் மமதா பயணம்
தற்போது மேற்கு வங்கத்தில் தேர்தல் வெற்றி மூலம் தமது முதல்வர் நாற்காலியைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார் மமதா பானர்ஜி. நாடு தழுவிய அளவில் பாஜகவை வீழ்த்தும் வல்லமை கொண்ட தலைவராக அவர் பார்க்கப்படுகிறார். நாடு முழுவதும் முக்கிய நகரங்களுக்கு மமதா பானர்ஜி அடுத்ததாக பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார். வடகிழக்கு மாநிலங்களில் வங்காளிகள் வாக்குகளை குறிவைத்து திரிணாமுல் காங்கிரஸை பலப்படுத்துவது போல கோவாவிலும் கால் பதித்துள்ளார் மமதா. நாடு தழுவிய அளவில் பாஜக எதிர்ப்பு அணியை கட்டமைப்பதில் இனி மமதா பானர்ஜி தீவிரம் காட்டுவார் என்கின்றன அவரது வட்டாரங்கள்.