மக்கள் வரிப்பணத்தில் ஸ்டார் ஹோட்டலில் "மஞ்சள்" குளிக்கும் பாஜக எம்.பிக்கள்!
டெல்லி: ஒருபக்கம் நரேந்திர மோடி அரசு சிக்கணம் தேவை இக்கணம் என்று கூறிக் கொண்டிருக்கிறது. ஆனால் மறுபக்கமோ அவரது கட்சி எம்.பிக்கள் அரசுப் பணத்தில் நட்சத்திர ஹோட்டல்களில் தங்கி அரசின் கஜானாவைக் கரைத்துக் கொண்டிருக்கின்றனர்.
அமைச்சர்கள் வீண் செலவுகளைத் தவிர்க்க வேண்டும் என்று கூறி அமைச்சர்களுக்கும் உயர் அதிகாரிகளுக்கும் செலவு செய்வதில் கடிவாளம் போட்டுக் கொண்டிருக்கும் பாஜக அரசில், அக்கட்சியைச் சேர்ந்த எம்.பிக்கள் பலர் மக்கள் வரிப்பணத்தை வாரியிறைத்து வீணாக செலவு செய்து வருவதை ஆர்டிஐ மூலம் வெளிக் கொணர்ந்துள்ளார் சந்திரசேகர் என்ற சமூக சேவகர்.
அரசு பங்களாக்கள் ஒதுக்கப்பட்டு விட்ட போதிலும் கூட அங்கு போகாமல் டெல்லி அசோகா ஹோட்டலில் ரூம் எடுத்து அரசுப் பணத்தை கரியாக்கிக் கொண்டிருக்கின்றனராம் இந்த எம்.பிக்கள்.
இதுதொடர்பாக அந்த ஆர்டிஐ தகவலில் வெளியாகியுள்ள தகவல்கள் வருமாறு...
92 எம்.பிக்கள்
மொத்தம் 92 எம்.பிக்கள் இதுபோல ஹோட்டலில் தங்கியுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பாஜகவைச் சேர்ந்தவர்கள்.
வென்றது முதல்
இவர்கள் லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று டெல்லிக்கு வந்தது முதலே ஹோட்டலில்தான் தங்கி வருகின்றனராம். இத்தனைக்கும் இவர்களுக்கு அரசு பங்களாக்கள் ஒதுக்கப்பட்டு விட்டன. ஆனால் பங்களாக்களுக்கு போகாமல் உள்ளனர் இவர்கள்.
எட்டு நாட்களில் போய் விட வேண்டும்
விதிமுறைப்படி எம்.பிக்களுக்கு அரசு பங்களா ஒதுக்கப்பட்டு விட்டால் அந்த வீட்டுக்கு அவர்கள் எட்டு நாட்களுக்குள் போய் விட வேண்டுமாம். ஆனால் இவர்கள் யாருமே போகவில்லை.
பல கோடி பில்
இந்த எம்.பிக்கள் அசோகா ஹோட்டலில் தங்கியுள்ளதற்கான பில் கட்டணம் பல கோடியைத் தாண்டியுள்ளதாம். இத்தனையும் அரசின் பணம்.. அதாவது மக்களின் வரிப்பணம்.
அமைச்சர்களும்
இந்த எம்.பிக்களில் பலர் அமைச்சர்களும் ஆவர். கடந்த 6 -7 மாதமாக இவர்கள் ஹோட்டலிலேயே தங்கி செலவிட்டு வருகின்றனர்.
டிசம்பரோடு சரி
பாஜகவைச் சேர்ந்த வட கிழக்கு டெல்லி எம்.பி. மனோஜ் குமார் திவாரி இதுகுறித்துக் கூறுகையில், நான் டிசம்பர் மாதத்தோடு அசோகா ஹோட்டலை விட்டு வந்து விட்டேன் என்று கூறியுள்ளார்.
மகேஷ் கிரியும்தானாம்!
மகேஷ் கிரி என்ற இன்னொரு பாஜக எம்.பி கூறுகையில் (இவர் கிழக்கு டெல்லி எம்.பி.) இது பழைய தகவல். நான் தற்போது ஹோட்டலிலேயே தங்குவதில்லை என்று கூறியுள்ளார்.
நல்லாட்சி...!
நல்லாட்சிக்காக நாடு முழுவதும் பிரசாரம் செய்து வருகிறது மோடி அரசு. ஆனால் அவரது கட்சி எம்.பிக்களும், அமைச்சர்களுமே இப்படி மக்கள் பணத்தை கரியாக்கி வருவது கேலிக்கூத்தாக உள்ளது.