அடுத்தடுத்து இடைத் தேர்தல்களில் படுதோல்வி- லோக்சபாவில் 'பெரும்பான்மை'யை பறிகொடுக்கும் பாஜக
இடைத்தேர்தல் தோல்விகளால் லோக்சபாவில் பெரும்பான்மையை பாஜக பறிகொடுத்து வருகிறது.
Recommended Video
டெல்லி: இடைத்தேர்தல்களில் தொடர் தோல்வி ஏற்பட்டு வரும் நிலையில் லோக்சபாவில் பாஜக பெரும்பான்மை பலத்தை இழக்க தொடங்கியுள்ளது.
2014 லோக்சபா தேர்தலின் போது 282 இடங்களில் பாஜக வென்றது. மத்தியில் ஆட்சி அமைக்க தேவையான இடங்கள் 272.
இந்த பெரும்பான்மைக்கு அதிகமான இடங்களில் வென்று 'கெத்து' காட்டியது பாஜக. 2015-ம் ஆண்டு முதலாவது லோக்சபா இடைத் தேர்தலை மத்திய பிரதேசத்தில் பாஜக எதிர்கொண்டது.
ரட்லம் இடைத்தேர்தல்
2014 தேர்தலில் மத்திய பிரதேசத்தில் உள்ள 29 இடங்களில் 27 இடங்களைக் கைப்பற்றியிருந்தது பாஜக. சிட்டிங் எம்பியாக இருந்த திலீப்சிங் புரியா காலமானதைத் தொடர்ந்து ரட்லம் லோக்சபா தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் வென்று பாஜகவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது.
காங்கிரஸ் அமோக வெற்றி
2017-ம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தின் குருதாஸ்பூர் லோக்சபா தொகுதிக்கு இடைத் தேர்தல் நடைபெற்றது. பாஜக எம்பியான வினோத் கன்னாவின் மறைவைத் தொடர்ந்து இத்தொகுதியில் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட லோக்சபா முன்னாள் சபாநாயகர் பல்ராம் ஜாக்கரின் மகன் சுனில் சிங் ஜாக்கர் அமோக வெற்றி பெற்றார்.
ராஜஸ்தான் இடைத்தேர்தல்
இந்த ஆண்டு ராஜஸ்தானின் ஆல்வார் மற்றும் ஆஜ்மீர் லோக்சபா தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் நடைபெற்றன. 2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் ராஜஸ்தானின் 25 தொகுதிகளையும் அள்ளியது பாஜக. ஆனால் இடைத் தேர்தல்களில் காங்கிரஸ் வேட்பாளர்கள் அதிரடியாக வென்றது பாஜகவை வெலவெலக்க வைத்தது.
பாஜகவுக்கு செம அடி
தற்போது உத்தரபிரதேசத்தின் புல்பூர், கோரக்பூர் மற்றும் பீகாரின் அரேரியா லோக்சபா தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் நடைபெற்றன. உத்தரப்பிரதேசத்தின் 2 தொகுதிகளில் சமாஜ்வாடி கட்சியும் பீகாரின் அரேரியாவில் லாலுவின் சமாஜ்வாடி கட்சியும் வெற்றி பெற்று பாஜகவை நிலைகுலைய வைத்துவிட்டது.
பெரும்பான்மையை இழக்கும் பாஜக
இப்படி அமிர்தசரஸ், ஸ்ரீநகர், குருதாஸ்பூர், ஆஜ்மீர், ஆல்வார், உல்பேரியா, கோரக்பூர், புல்பூர் மற்றும் அரேரியா என 10 தொகுதிகளின் இடைத் தேர்தல் தோல்விகளால் பாஜகவின் பலம் லோக்சபாவில் 272 எம்.பிக்களாக ஆக குறைந்துவிட்டது. மேலும் பாஜகவில் கீர்த்தி ஆசாத், சத்ருகன் சின்ஹா ஆகிய 2 எம்.பிக்கள் கலகக் குரல் எழுப்பி வருகின்றனர். இதனால் லோக்சபாவில் பாஜகவின் பலம் 271. ஆகையால் பாஜக பெரும்பான்மையை இழந்துவிட்டது என்பது காங்கிரஸ் தலைவர்கள் குற்றச்சாட்டு.