கர்நாடகா போல மத்திய பிரதேசத்தில் வேலை காட்ட முடியாது.. பாஜகவுக்கு பதிலடி கொடுத்த கமல்நாத்
போபால்: கர்நாடகாவில் காங்கிரஸ்-மஜத) அரசு கவிழ்ந்ததை ஒப்பிட்டால், மத்திய பிரதேச அரசு நிலைமை மிகவும் மோசமானது என்று மத்திய பிரதேச எதிர்க்கட்சித் தலைவர் கோபால் பார்கவ் (பாஜக) கூறினார். இதற்கு முதல்வர் கமல்நாத் தக்க பதிலடி கொடுத்தார்.
கர்நாடகாவில் காங்கிரஸ்-மஜத அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்த ஒரு நாளுக்குப் பிறகு, அதாவது இன்று, மத்திய பிரதேச சட்டமன்றம் பெரும் புயலை சந்தித்தது.
கடந்த எட்டு மாதங்களாக ஆட்சியில் இருக்கிறது முதல்வர் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு. 14 மாதங்களுக்குப் பிறகு கர்நாடகாவில் எப்படி ஆபரேஷன் லோட்டஸ் மூலம் ஆட்சி கலைக்கப்பட்டுள்ளதோ அதே கதி ம.பி.க்கும் ஏற்படும் என்ற ஆரூடங்கள் றெக்கை கட்டி பறக்கும் நிலையில், கோபால் பார்கவ் அதே கருத்தை சட்டசபையில் இன்று எதிரொலித்தார்.
எங்கள் நம்பர் 1 அல்லது நம்பர் 2 உத்தரவிட்டால் போதும், உங்கள் அரசாங்கம் ஒரு நாள் நீடிக்காது என்று கமல்நாத்துக்கு சவால் விடுத்தார், கோபால். மோடி மற்றும் அமித்ஷாவை மனதில் வைத்து கோபால் இப்படி கூறியதாக கூறப்படுகிறது.
இதற்கு பதிலடி கொடுத்த கமல்நாத், உங்கள் நம்பர் 1 மற்றும் நம்பர் 2 புத்திசாலிகள், அதனால்தான் அவர்கள் கட்டளைகளை வழங்கவில்லை. நீங்கள் விரும்பினால் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வாருங்கள் என்று தெரிவித்தார்.
முன்னதாக, ரெஹ்லியைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ கர்நாடகாவை விட மத்திய பிரதேச அரசின் நிலைமை மிகவும் மோசமானது என்று கூறியிருந்தார்.
மத்திய பிரதேச சட்டசபைத் தேர்தலில், மொத்தமுள்ள 230 தொகுதிகளில் 114 இடங்களை காங்கிரஸ் வென்றது. 108 இடங்களைப் பிடித்த பாஜகவை விட சிறு அளவிலான வித்தியாசம்தான் இது. பெரும்பான்மைக்கு தேவை 116 என்பதால், நான்கு சுயேச்சைகள், இரண்டு பகுஜன் சமாஜ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஒரு சமாஜ்வாடி கட்சி எம்.எல்.ஏ ஆகியோரின் உதவியுடன் காங்கிரஸ் அரசு அமைக்க முடிந்தது.