குஜராத், மகாராஷ்டிரா, ம.பியில் சீட்டுக்களை அள்ளப்போகும் பாஜக: கருத்துக் கணிப்பு
டெல்லி: மோடி அலை காரணமாக குஜராத், மத்தியபிரதேசம், மகாராஷ்டிரா மாநிலங்களில் காங்கிரசை பின்னுக்கு தள்ளி, பலம் பெரும் கட்சியாக பா.ஜ.க உருவெடுத்துள்ளதாக லோக்நிதி -ஐபிஎன் கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது.
நரேந்தர மோடி தலைமையில் லோக்சபா தேர்தலை எதிர்கொள்ள பாஜக தயாராகி வருகிறது. கூட்டணிக்கான பரபரப்பான பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
அதிக இடங்களில் வென்று ஆட்சியைக் கைப்பற்றப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு ஒருபுறம் இருக்க, கருத்துக்கணிப்புகளும் மற்றொருபுறம் ஊடகங்களில் வெளியாகி அரசியல் கட்சியினரை அச்சுறுத்தி வருகிறது.
பாஜகவின் எழுச்சி
கடந்த 2009ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலை விட நடைபெறப் போகும் தேர்தலில் பாஜக அதிக எண்ணிக்கையில் இடங்களைக் கைப்பற்றப் போகிறது. குஜராத், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் தனிப்பெரும் கட்சியாக பாஜக மாபெரும் வெற்றி பெறும் என லோக்நிதி-ஐபிஎன் நடத்திய கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.
எழுச்சி மிக்க தலைமை
நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்த பின்னர் வடஇந்தியாவிலும் பா.ஜ.க பலம் அதிகரித்துள்ளது. குஜராத், மத்திய பிரதேசம், மகாராஷ்டிராவில் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பா.ஜ.க மிகப் பெரிய வெற்றியை பெற்று நாட்டின் தலைமையைக் கைப்பற்றும் என அந்த கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.
குஜராத்தில் 25
நரேந்திரமோடி முதல்வராக உள்ள குஜராத் மாநிலத்தில் 20 முதல் 25 இடங்களை பாஜக கைப்பற்றுமாம். காங்கிரசிற்கு குஜராத்தில் 1 முதல் 4 இடங்கள் மட்டுமே கிடைக்க வாய்ப்புள்ளதாம்.
மோடி பிரதமராக ஆதரவு
குஜராத் வாக்காளர்களிடையே மோடி பிரதமராக பெரும் ஆதரவு காணப்படுகிறதாம்.
மகாராஷ்டிராவில்
மகராஷ்டிராவில் சிவசேனா-பாஜக கூட்டணி 25 - 33 இடங்களைக் கைப்பற்றும் என்று கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது. காங்கிரசிற்கு 12-20 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்று தெரிவிக்கிறது அந்த கருத்துக்கணிப்பு. உதிரிக்கட்சிகளுக்கு ஒன்று முதல் ஐந்து இடங்கள் மட்டுமே கிடைக்கும்.
ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல்
காங்கிரஸுக்கு 12 முதல் 20 இடங்கள் கிடைக்க முக்கியக் காரணம், முதல்வர் பிரிதிவ்ராஜ் சவானுக்கு உள்ள கிளீன் இமேஜ்தானாம். மற்றபடி ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல் உள்ளிட்டவை காங்கிரஸ் கட்சிக்கு எதிரான அலையை மகாராஷ்டிரத்தில் உருவாக்கியுள்ளது.
ஆம் ஆத்மி கட்சிக்கு
ஆம் ஆத்மி கட்சியினால் பெரும்பாலான இடங்களில் ஓரளவிற்கு வாக்குகளை பெறமுடியும் என்றாலும் இடங்களைக் கைப்பற்றும் அளவிற்கு வெற்றி பெற முடியுமா என்பது சந்தேகமே.
மத்திய பிரதேசத்தில்...
மத்திய பிரதேசத்தில் ஆளும் பாஜக முதல்வர் சிவராஜ் சவுகான் மக்களிடம் நன்மதிப்பினை பெற்றுள்ளார். இது பாஜகவுக்கும் உதவப் போகிறது. அம்மாநிலத்தில் 23 முதல் 27 இடங்களைக் பாஜக கைப்பற்றும். அதேசமயம் காங்கிரஸ் கட்சி 2-5 இடங்களை மட்டுமே பெற வாய்ப்புள்ளதாம்.
சட்டீஸ்கர் மாநிலத்தில்
பாஜக வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ள சட்டீஸ்கர் மாநிலத்தில் பாஜகவின் வாக்கு வங்கி 50 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. அதேசமயம் காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கி 34 சதவிகிதம் மட்டுமே.
வட மாநிலங்களில் காங்கிரசின் வீழ்ச்சி
2009 ம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலைக்காட்டிலும், இந்த தேர்தலில் வடமாநிலங்களில் காங்கிரசின் வீழ்ச்சி கண்கூடாக தெரிகிறது. கடந்த 6 மாதத்தில் மட்டும் காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கி 43 சதவிகிதத்தில் இருந்து 35 சதவிகிதமாக குறைந்துள்ளது.
பாஜகவின் எழுச்சி
அதேசமயம் பாஜகவின் வாக்கு வங்கி 51 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. குஜராத்தில் 2004, 2009 தேர்தல்களை ஒப்பிடும் போது 2014 மக்களவைத் தேர்தலில் பாஜகவின் வளர்ச்சி அபரிமாக உயர்ந்துள்ளது.
பிராந்திய கட்சிகளுக்கு வாய்ப்பு
அதேசமயம் கிழக்கு, தெற்கு மாநிலங்களைப் பொறுத்த வரை பிராந்திய கட்சிகளும், சிறிய கட்சிகளும் வெற்றி பெற்று அதிகளவிலான இடங்களை கைப்பற்றும் எனவும், மத்தியில் புதிய அரசு அமைவதில் முக்கிய பங்கு வகிக்கும் எனவும் கருத்துகணிப்பு கூறுகிறது.
மோடி அலைதான்...
நாடு முழுவதும் வீசத் துவங்கி உள்ள மோடி அலை காரணமாகவே மத்திய மாநிலங்களில் பா.ஜ.க மிகப் பெரிய அளவில் வெற்றியை பெற்று, பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றும் எனவும் அந்த கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.