மெட்ரோ ரயிலில் கேஜ்ரிவால் பயணித்தது தேவையில்லாத பப்ளிசிட்டி ஸ்டண்ட்- பாஜக
டெல்லி: டெல்லி சட்டசபையில் இன்று நடந்த நம்பிக்கை கோரும் வாக்கெடுப்புக்கு முந்தைய விவாதத்தின்போது பேசிய பாஜக தலைவர் டாக்டர் ஹர்ஷ வர்த்தன், முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலும், அவரது அமைச்சர்களும் பதவியேற்க வந்தபோது மெட்ரோ ரயிலில் பயணித்தது தேவையற்றது, விளம்பரம் தேடும் நோக்கிலானது என்று குற்றம் சாட்டினார்.
கேஜ்ரிவால் இன்று சட்டசபையில் நம்பிக்கை வாக்கு கோரினார். அதன் மீ்து விவாதம் நடந்தது. அப்போது பேசிய ஹர்ஷவர்த்தன், டெல்லி மெட்ரோ ரயிலில் பயணித்ததன் மூலம் டெல்லி மக்களிடையே நன்றாக விளம்பரம் தேடிக் கொண்டுள்ளனர் கேஜ்ரிவாலும், அவரது அமைச்சர்களும். இது தேவையற்ற பப்ளிசிட்டி ஸ்டண்ட்.
கேஜ்ரிவால் அரசு அறிவித்துள்ள இலவச குடிநீர், மின் கட்டணக் குறைப்பு போன்றவை மக்களிடையே உண்மை நிலையை மறைக்கும் செயலாகும். இது சாத்தியமில்லாதது.
ஆம் ஆத்மி கட்சி தொடங்கப்பட்டபோது மக்களிடையே மிகுந்த நம்பிக்கை ஏற்பட்டது உண்மைதான். நாட்டு மக்கள் இதை வரவேற்றனர், எதிர்பார்த்தனர். ஆனால் காங்கிரஸ் உதவியுடன் அவர்கள் ஆட்சியமைத்ததன் மூலம் அந்த நம்பிக்கை தகர்ந்து போய் விட்டது என்றார் அவர்.