சிஏஏக்கு “நோ என்ட்ரி”.. குடிமக்களை தீர்மானிக்க பாஜக யார்? குஜராத் தேர்தல் வருதில்ல - மம்தா கேள்வி
கொல்கத்தா: குஜராத் மாநில சட்டசபைத் தேர்தலுக்காக சிஏஏவை பாஜக கையில் எடுப்பதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டி இருக்கிறார்.
மேற்கு வங்க மாநிலம் கிருஷ்ணாநகரில் பேசிய அவர், "மேற்கு வங்கத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்த விட மாட்டேன்.
குடியுரிமை சட்டத் திருத்தத்தையும், தேசிய குடிமக்கள் பதிவேட்டையும் குஜராத் தேர்தல் காரணங்களுக்காகவே பாஜக கையில் எடுத்து உள்ளது.
குஜராத் பாஜக கோட்டையா? வாய்ப்பே இல்லை.. 7 தொகுதிகளில் ஒருமுறை கூட வெற்றி பெறாத ‛‛தாமரை’’.. ஏன்?
தேர்தலுக்காக சிஏஏ
மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக பிரிவினையை உண்டாக்க முயற்சித்து வருகிறது. மாநிலத்தை பிரிக்க நான் எந்த வகையிலும் சம்மதிக்க மாட்டேன். எப்போதெல்லாம் தேர்தல் வருகிறதோ அப்போதெல்லாம் பாஜக சிஏஏ மற்றும் என்ஆர்சியை அமல்படுத்துவோம் என்று பேசும்.
தேர்தலுக்காக சிஏஏ
குஜராத் மாநிலத்துக்கான தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. ஒன்றரை ஆண்டுகளில் லோக் சபா தேர்தல் நடைபெற இருக்கிறது. எனவே பாஜக மீண்டும் சிஏஏ பற்றி பேசுகிறது. குடிமக்கள் யார் என்று முடிவு செய்வதற்கு பாஜக யார்? மதுவா சமூகத்தினர் இந்தியாவின் குடிமக்கள் ஆவார்கள்.
மாநிலத்தை பிரிக்க சதி
அரசியல் ரீதியாக சக்திவாய்ந்த மதுவா சமுதாயத்தினரின் பூர்வீகம் தற்போது வங்கதேசமாக இருக்கும் கிழக்கு வங்காளத்தில் உள்ளது. அவர்களில் பெரும்பாலான மக்கள் வடக்கு மாவட்டங்களான பர்கனாஸ், நாதியாவில் வசித்து வருகிறார்கள். பாஜக மேற்கு வங்கத்தின் வடக்கு பகுதிகளில் உள்ள ராஜ்பன்சீஸ் மற்றும் கூர்கா இனத்தவர்களை தூண்டிவிட்டு பிரிவினைவாதத்தை ஏற்படுத்த முயல்கிறது.
பாஜக ஆட்சியமைக்காது
2024 லோக் சபா தேர்தலுக்கு பிறகு பாஜகவால் மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வர முடியாது. கடந்த 2019 ஆம் ஆண்டு நாட்டில் இருந்த அரசியல் சூழலும், தற்போது நிலவி வரும் அரசியல் சூழலும் மாறிவிட்டது. கடந்த 2019 ஆம் ஆண்டு பாஜக பீகார், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் ஆட்சியில் இருந்தது. ஆனால், இப்போது இல்லை.
மாநிலங்களில் பாஜக
அதே சமயம், பாஜகவின் அரசியல் இருப்பு நாடு முழுவதும் குறைந்துவிட்டது. பல மாநிலங்களில் தற்போது பாஜக ஆட்சியிலேயே இல்லை. பாஜக பல மாநிலங்களில் ஏற்கனவே இறுதி நிலையை எட்டிவிட்டது. அதன் காரணமாகவே தற்போது எதிர்க்கட்சித் தலைவர்களை தாக்கியும் பேசியும் கைது செய்தும் வருகிறது." என்றார்.
அமித்ஷா பேச்சு
கடந்த மே மாதம் மேற்குவங்க மாநிலம் சிலிகுரியில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, "குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சி அவதூறுகளை பரப்பி வருகிறது. சிஏஏ சட்டம் அமல்படுத்தப்படாது என்று அவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
கொரோனாவுக்கு பின் சிஏஏ
கொரோனா அலைகள் ஓய்ந்தவுடன் குடியுரிமை திருத்தச் சட்டத்தை கொண்டு வருவோம் என நான் இப்போது சொல்கிறேன். மம்தா பானர்ஜி வெளிநாட்டினர் ஊடுருவலை விரும்புகிறார். மேற்கு வங்கத்துக்கு வரும் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்படாது. திறந்த காதுகளுடன் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் இதை கேளுங்கள். சிஏஏ என்ற உண்மை விரைவில் மெய்பிக்கப்படும்." என்றார்.
என்பிஆர்
இந்த நிலையில் கடந்த 7 ஆம் தேதி தேசிய மக்கள் தொகை பதிவேடான என்பிஆர் கணக்கெடுப்பை ஒவ்வொரு குடும்பத்திலும் எடுக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சக ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சி.ஏ.ஏ. மற்றும் என்.ஆர்.சியின் முதல் படி என்பிஆர் என்பது குறிப்பிடத்தக்கது.