ஒரே ஒரு எம்.பி. கொண்ட கட்சி ஆதரவு தந்தாலும் ஏற்போம்: எல்லோருக்கும் வலை வீசும் பாஜக!
டெல்லி: யார் ஆதரவு அளித்தாலும் அது 1 எம்.பி. கொண்ட கட்சியாக இருந்தாலும் கூட பாஜக ஏற்கும் என்று அக்கட்சி தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
இது குறித்து பாஜக தலைவரும், குஜராத் முதல்வர் மோடிக்கு நெருக்கமானவருமான அமித் ஷா கூறுகையில்,
நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 290 முதல் 305 இடங்கள் கிடைக்கும். உத்தர பிரதேச மாநிலத்தில் மட்டும் 50 முதல் 55 இடங்கள் கிடைக்கும். நாங்கள் 272க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்ற நினைத்து போராடினோம். அது எங்களுக்கு கிடைக்கப் போகிறது. எந்த கட்சியாக இருந்தாலும் அவர்களிடம் ஒரு எம்.பி. இருந்தால் கூட அவர்கள் எங்களுக்கு ஆதரவு அளிக்க நினைத்தால் அதை வரவேற்போம்.
பாஜக ஆட்சிக்கு வந்தால் எனது பதவி பற்றி கட்சி எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன். இந்த தேர்தல் பாஜகவுக்கு ஆதரவாக அமைந்துள்ளது. அதற்கு காரணம் மோடி மற்றும் கட்சியினர் தான். இந்த வெற்றி பாஜக மற்றும் மோடிக்கான வெற்றி.
பாஜக மேற்கு மற்றும் கிழக்கு உத்தர பிரதேசத்திலும் அமோக வெற்றி பெறும் என்று நம்புகிறேன். உத்தர பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சி இரண்டாவது இடத்தை தான் பிடிக்கும்.
பாஜகவுக்கும் முஸ்லீம் சமூகத்திற்கும் இடையே ஒரு இடைவெளி உருவாக்கப்பட்டுள்ளது. பாஜக மத்தியில் ஆட்சி அமைக்கும்போது எங்கள் நல்லாட்சி அனைத்து விமர்சனங்களும் தவறு என்பதை நிரூபித்துக் காட்டும். மேலும் எங்கள் நல்லாட்சி முஸ்லீம்களை எங்களுக்கு நெருக்கமாக்கும்.
எந்த மதத்திற்கும் பாஜக பாரபட்சம் காட்டியது இல்லை. கொள்ளைகள் மற்றும் திட்டங்களை நிறைவேற்றுகையில் அனைவரையும் சமமாகவே பார்க்கிறோம் என்றார்.