ராஜஸ்தானில் நடந்த மிகப்பெரிய குழந்தை திருமணவிழா... போட்டோகிராபரால் அம்பலம்!
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் கிராமம் ஒன்றில் கடந்த மாதம் சுமார் 20 ஜோடி குழந்தைகளுக்கு ஒரே இடத்தில் திருமணம் நடந்துள்ளது புகைப்பட ஆதாரத்துடன் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இந்தியாவில் குழந்தைத் திருமணம் தடை செய்யப் பட்ட ஒன்றாகும். அரசு ஆணுக்கும், பெண்ணுக்கும் குறிப்பிட்ட வயதை திருமண வயதாக நிர்ணயித்துள்ளது. அதற்கு முன்னதாக நடைபெறும் திருமணங்கள் சட்டப்படி குற்றமாகும்.
ஆனாலும், பல இடங்களில் ரகசியமாக குழந்தைத் திருமணங்கள் நடத்தப் படுகின்றன. அவை குறித்து முன்கூட்டியே தகவல் கிடைத்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து சென்று திருமணத்தை தடுத்து நிறுத்தி விடுவார்கள்.
இந்நிலையில், சமீபத்தில் ராஜஸ்தானில் நடந்த குழந்தைத் திருமணத்தை கிராமமே திருவிழாவாகக் கொண்டாடிய அதிர்ச்சித் தகவல் தற்போது அம்பலமாகியுள்ளது.
அழைப்பு...
ராஜஸ்தான் மாநிலம் கிஷன்கார் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் கடந்த மாதம் குழந்தைத் திருமணம் ஒன்று நடக்க இருப்பதாக சங்கர் புரி என்ற புகைப்படக் கலைஞருக்கு தெரிய வந்துள்ளது.
அதிர்ச்சி...
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றவர் அதிர்ச்சியடைந்து விட்டார். காரணம் அங்கு நடைபெற இருந்தது ஒரு குழந்தைத் திருமணமல்ல, இருபது. விதவிதமான ஆடைகள் அணிந்து மணமக்களாக குழந்தைகள் இருந்துள்ளனர்.
வயது குறைந்த குழந்தைகள்...
கிராமமே விழாக்கோலம் பூண்டிருக்க, மணமகள்களாக இருந்த பெண் குழந்தைகளுக்கு வயது 7க்கும் கீழ் தானாம். மணமகனாக இருந்த சிறுவர்களுக்கு வயது 16க்குள் இருக்கும் என சங்கர் புரி தெரிவித்துள்ளார்.
புகைப்படங்கள்...
இந்த பெரிய மணவிழா அங்கிருந்தவர்களுக்குத் தெரியாமல் புகைப்படங்களாக எடுத்துள்ளார் சங்கர் புரி. இந்த விழாவில் கிராமத்தை சேர்ந்த அதிகமான பேர் கலந்து கொண்டதால், தன்னால் ஏதும் செய்ய இயலவில்லை எனத் தெரிவித்துள்ள சங்கர், அப்புகைப்படங்களைத் தற்போது வெளியிட்டுள்ளார்..
போலீஸ் வருகை...
இவ்வாறு குழந்தைகளுக்கு திருமணம் நடப்பதாக தெரிய வந்ததும், தான் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்ததாகவும், ஆனால் போலீசாரால் அத்திருமணங்களை தடுத்து நிறுத்த இயலவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆடல், பாடல் நிகழ்ச்சிகள்...
இந்த குழந்தைகள் திருமண விழாவில் ஆடல், பாடல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப் பட்டிருந்ததாகவும், விவரமறியா குழந்தைகள் மணமக்களாக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார் சங்கர் புரி.