பட்ஜெட் 2015: வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ 3 லட்சமாகிறது?
டெல்லி: இந்த ஆண்டு பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.3 லட்சமாக உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆண்டுதோறும் பட்ஜெட் தேதி நெருங்க நெருங்க மாதச் சம்பளதாரர்கள் பெரிதும் எதிர்ப்பார்ப்பது வருமான வரிவிலக்கு உச்சவரம்பு உயர்வைத்தான். இந்த ஆண்டுக்கான பட்ஜெட் வரும் பிப்ரவரி 28-ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது.
கடந்த ஆண்டு மத்தியில் பாரதீய ஜனதா ஆட்சிக்கு வந்து, நிதி அமைச்சர் அருண் ஜெட்லி ஜூலை 10-ந் தேதி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்த முதல் பட்ஜெட்டில், தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பினை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.2.5 லட்சமாக உயர்த்தினார்.

அது மட்டுமின்றி சேமிப்புகள் உள்ளிட்டவை அடங்குகிற 80-சி பிரிவின் கீழான வருமான வரிச்சலுகை உச்சவரம்பையும் ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.1.5 லட்சமாக உயர்த்தினார். பி.பி.எப். என்னும் பொது சேம நிதியில் ரூ.1 லட்சம் வரை வரி விலக்கு வழங்கப்பட்டு வந்ததை ரூ.1.5 லட்சமாக அதிகரித்தார். வீட்டு கடன் மீதான வட்டிக்கு ரூ.1.5 லட்சம் வரை வரிச்சலுகை வழங்கப்பட்டு வந்ததையும் ரூ.2 லட்சமாக உயர்த்தினார்.
இந்த நிலையில், வரும் 28-ந் தேதி மத்திய நிதி மந்திரி 2015-16 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட்தான், பாரதிய ஜனதா கூட்டணி அரசின் முதல் முழுமையான பட்ஜெட் என்பதால் தனி நபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு கணிசமாக உயர்த்தப்படும் என நம்புகின்றனர்.
இந்த ஆண்டு இந்த உச்சவரம்பு ரூ.3 லட்சம் என்ற அளவுக்கு உயர்த்தப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
நிதி அமைச்சர் அருண் ஜெட்லியும் இதுகுறித்து சூசகமாக தெரிவித்துள்ளார். நடுத்தர மக்களின் வாக்குகள் மற்றும் வரவிருக்கும் தமிழகம் உள்ளிட்ட மாநில சட்டமன்றத் தேர்தல்கள் போன்றவை பட்ஜெட்டில் கணிசமான சலுகைகளை அறிவிக்க வைக்கும் என்றும் அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications