நீர்வள அமைச்சகம் முன்வைத்த நதிகள் இணைப்பு திட்ட அறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
டெல்லி: மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் முன்வைத்த நதிகள் இணைப்புத் திட்ட அறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
2012ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நதிகள் இணைப்புக்கான ஒரு உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டது. மத்திய நீர்வளத்துறை அமைச்சர் தலைமையிலான இக்குழுவில் பல்வேறு துறை அதிகாரிகள் இடம்பெற வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டிருந்தது.
மேலும் தமிழகம் உட்பட 12 மாநில அமைச்சர்கள், செயலாளர்கள் இக்குழுவில் இடம்பெற்றிருக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து மத்திய அரசும் நதிகள் இணைப்புக்கான உயர்நிலைக் குழுவை அமைத்திருந்தது,
இந்த குழு, நதிகள் இணைப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக மத்திய அரசுக்கு அறிக்கைகள் அளித்து வரும்.
இதன்படி நதிகள் இணைப்பு தொடர்பான மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தின் நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கைக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியது.
இந்த அறிக்கையின்படி நதிகள் இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்துவது குறித்து மத்திய அரசு முடிவெடுக்கும்.