அமேதி உட்பட 64 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு: சீமாந்திரா சட்டசபைக்கு முதல் தேர்தல்
டெல்லி: நாடாளுமன்ற தேர்தலின் 8ம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறும் நிலையில், தேர்தல் நடைபெறும் 64 தொகுதிகளில் நேற்று மாலையுடன் பிரச்சாரம் ஒய்ந்தது. இந்திய ஜனநாயகத்தின் மிகப்பெரிய திருவிழாவான நாடாளுமன்ற தேர்தல் கடந்த மாதம் 7ம்தேதி தொடங்கி இம்மாதம் 12ம்தேதிவரை 9 கட்டங்களாக நடந்துவருகிறது. 16வயது நாடாளுமன்றத்தை தேர்ந்தெடுக்கப்போகும் ஆர்வத்தில் மக்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களித்து வருகிறார்கள்.
64 தொகுதிகள்
தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநிலங்கள் உட்பட பல தொகுதிகளில் இதுவரை 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்து முடிந்துவிட்டது. ஆந்திராவிலுள்ள 25 தொகுதிகளுக்கும், உத்தரபிரதேசத்தின் 15 தொகுதிகள், பிகாரின் 7 தொகுதிகள், ஜம்மு-காஷ்மீரின் 2 தொகுதிகள், இமாச்சல பிரதேசத்தின் 4 தொகுதிகள், உத்தரகாண்டில் 5 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 6 தொகுதிகள் என மொத்தம் 64 தொகுதிகளுக்கு நாளை புதன்கிழமை, 8ம்கட்டமாக தேர்தல் நடக்கிறது.
கவனம் ஈர்க்கும் அமேதி
இதையடுத்து இத்தொகுதிகளில் நேற்று மாலை 5 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. 8ம்கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் ராகுல்காந்தி போட்டியிடும் அமேதி அரசியல் பார்வையாளர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. ராகுலை தோற்கடிக்க வேண்டும் என்ற முடிவுடன் உள்ள பாஜக, ஸ்மிருதி இரானியை வேட்பாளராக்கியுள்ளது. நேற்று மாலை அமேதியில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திரமோடி ராகுல் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு எதிராக கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இத்தொகுதியில் ஆம் ஆத்மி சார்பில் குமார் விஸ்வாஸ் போட்டியிடுகிறார்.
ஆந்திராவில் அதிகம், காஷ்மீரில் குறைவு
8ம் கட்ட தேர்தல் நடைபெறும் 64 தொகுதிகளிலும், எட்டரை கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதிபெற்றவர்கள். 897 வேட்பாளர்கள் களத்திலுள்ளனர். அதில் ஆந்திராவில் அதிகபட்சமாக 333 வேட்பாளர்கள் களத்திலுள்ளனர். ஜம்மு காஷ்மீரில் குறைந்தபட்சமாக 19 வேட்பாளர்கள் போட்டியிலுள்ளனர்.
சீமாந்திரா தலையெழுத்து நிர்ணயம்
நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து ஆந்திர மாநிலத்திலுள்ள சீமாந்திரா மண்டலத்திலுள்ள 175 சட்டசபை தொகுதிகளுக்கும் நாளை தேர்தல் நடைபெறுகிறது. ஆந்திர மாநிலம் ஜூன் 2ம்தேதி, சீமாந்திரா, தெலுங்கானா என இரண்டாக பிரிக்கப்பட உள்ளதால் சீமாந்திரா சட்டசபைக்கு இது முதலாவது தேர்தல். பிகார் மற்றும் உத்தரபிரதேசத்தில் தலா 2 சட்டசபை தொகுதிகளுக்கும் , ஹிமாச்சல் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கத்தில் தலா 1 சட்டசபை தொகுதிகளுக்கும் நாளை இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
ஸ்டார் வேட்பாளர்கள்
அமோதி தொகுதியில் ராகுல்காந்தி, சுல்தான்பூரில் பாஜக சார்பில் வருண்காந்தி, கோண்டா தொகுதியில் பேனி பிரசாத் வர்மா ஆகியோர் உத்தரபிரதேசத்தில் நாளை தேர்தல் நடைபெறும் தொகுதிகளின் ஸ்டார் வேட்பாளர்களாகும். ஆந்திராவில் என்.டி.ராமாராவ் மகள் புரந்தேஷ்வரி ராஜம்பேட் தொகுதியில் முக்கிய வேட்பாளர். சீமாந்திா பகுதி சட்டசபை தேர்தலில் குப்பம் தொகுதியில் சந்திரபாபுநாயுடுவும், புலிவென்டுலா தொகுதியில் ஜெகன்மோகன் ரெட்டியும் ஸ்டார் வேட்பாளர்கள்.