வாரணாசி தொகுதியில் மோடியின் வெற்றியை எதிர்த்து மும்பை ஹைகோர்ட்டில் வழக்கு
மும்பை: நரேந்திர மோடி வெற்றி பெற்ற வாரணாசி லோக்சபா தொகுதியின் தேர்தல் முடிவை தேர்தல் ஆணையம் நிறுத்தி வைக்க உத்தரவிடக்கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.மோடியின் சமூக சேவகர் ஹேமந்த் படேல் என்பவர் இந்த வழக்கினை தொடர்ந்து உள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி லோக்சபா தேர்தலின்போது, குஜராத் மாநிலம் வதோதரா, உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி ஆகிய 2 தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதில், வதோதரா தொகுதி எம்.பி. பதவியை அவர் ராஜினாமா செய்தார்.
இந்த நிலையில் மோடியின் வாரணாசி தொகுதி தேர்தல் வெற்றியை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் சமூக சேவகர் ஹேமந்த் படேல் என்பவர் வழக்கு தொடர்ந்து உள்ளார்.
இது குறித்து அவரது மனுவில், லோக்சபா தேர்தலின்போது, வாரணாசி தொகுதியில் அம்பானி, அதானி உள்ளிட்ட பல்வேறு தொழில் அதிபர்களின் ஆதரவு மோடிக்கு இருந்தது. இதனால் சட்டவிதிகளை மீறி அந்த தொகுதியில் அதிக அளவில் தேர்தல் செலவு செய்யப்பட்டது. மேலும் ஊடக பிரசாரத்துக்காகவும் கோடிக்கணக்கான பணத்தை மோடி செலவு செய்தார் என்று கூறப்பட்டுள்ளது.

கோடிக்கணக்கில் செலவு
தேர்தல் ஆணையம் லோக்சபா வேட்பாளர் ஒருவர் ரூ.70 லட்சம் வரை மட்டுமே செலவு செய்ய அனுமதி அளித்து இருந்தது. ஆனால், இதை மோடி ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. தனக்கு மட்டுமின்றி தனது கட்சி வேட்பாளர்கள் அனைவருக்கும் தொகுதியில் ரூ.5 கோடி முதல் ரூ.10 கோடி வரை அவர் செலவு செய்தார்.

வெற்றிக்குக் காரணம்
இவ்வளவு பணம் செலவு செய்ததால்தான் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை பெறும் அளவுக்கு தேர்தல் வெற்றி கிடைத்தது. மோடியும் பிரதமர் பதவி என்னும் நிலையை அடைந்தார்.

விதிமீறல் புகார்
இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் ஆகியவற்றின் விதிமுறைகளை மீறி மோடி வாரணாசி தொகுதியில் செய்த தேர்தல் செலவு குறித்து 29-3-2014 அன்று நான் தேர்தல் ஆணையத்துக்கும், மத்திய அரசுக்கும் எழுத்துப்பூர்வமாக விரிவாக புகார் தெரிவித்து இருந்தேன்.
ஆனால், மோடிக்கு உள்ள செல்வாக்கின் காரணமாக அவருக்கு எதிராக இரு தரப்பினரும் இதுவரை அவர் மீது விசாரணை நடத்தியதாகவோ, சட்டரீதியான நடவடிக்கை எடுத்ததாகவோ தெரியவில்லை.

தேர்தல்முடிவுக்கு எதிராக மனு
எனவே, இந்த மனு மீது விசாரணை நடத்தப்படும் வரை வாரணாசி லோக்சபா தொகுதியின் தேர்தல் முடிவை தேர்தல் ஆணையம் நிறுத்திவைக்கும்படியும், இது தொடர்பாக விசாரணை நடத்தி மோடி மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கும்படியும் நீதிமன்றம் உத்தரவிடவேண்டும்.

நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்
இதேபோல் மத்திய அரசும், தேர்தல் ஆணையமும் எனது புகார் தொடர்பான ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும், அதன் மீது குறிப்பிட்ட காலத்துக்குள் அறிக்கை தயாரித்து அளிக்கும்படியும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications