கோவளத்தில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட 5 எம்எல்ஏக்கள் மீது வழக்கு!
கன்னியாகுமரியில் தடையை மீறி போராட்டம் நடத்திய 5 எம்எல்ஏக்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவளம்: கோவளத்தில் தடையை மீறி பன்னாட்டு துறைமுகம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்ட 5 எம்எல்ஏக்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் இணயத்தில் சர்வதேச வர்த்தக துறைமுகம் அமைக்க மத்திய அரசு முயற்சி மேற்கொண்டது. இதற்கு பலதரப்பிலிருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. தற்போது கீழ மணக்குடி முதல் கோவளம் வரை சரக்கு பெட்டக மாற்று முனைய துறைமுகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தை செயல்படுத்தினால் ஊருக்குள் கடல்நீர் புகுவதுடன், வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் என அஞ்சிய அப்பகுதி மக்கள், மற்றும் மீனவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இதனால் மத்திய அரசின் வர்த்தக துறைமுக திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் முன்பு கனவ ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டம் நடைபெற்றது. இவற்றில் ஈடுபட்ட எம்எல்ஏக்கள் அஸ்டின், மனோதங்கராஜன், சுரேஷ்ராஜன், ராஜேஷ்குமார், பிரின்ஸ் உள்ளிட்ட 400-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்த போலீசார் நேற்று விடுவித்தனர்.
இந்நிலையில், தடையை மீறி போராட்டம் நடத்தியதாக எம்எல்ஏக்கள் அஸ்டின், மனோதங்கராஜன், சுரேஷ்ராஜன், ராஜேஷ்குமார், பிரின்ஸ் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.