கூரையை பிய்த்துக் கொண்டு பாய்ந்த சிறுத்தை... அலறி ஓடிய மக்கள்: 'கிலி' காட்சிகள்
சந்திராபூர்: மராட்டிய மாநிலத்தில் குடியிருப்புப் பகுதியில் புகுந்த சிறுத்தைப் புலி ஒன்றை பொதுமக்கள் உதவியோடு வனத்துறையினர் பிடிப்பதற்காக மேற்கொண்ட சாகசச் செயல்கள் வீடியோ காட்சிகளாக வெளியாகியுள்ளது. சிறுத்தைப் புலியைப் பிடிப்பதற்கு அவர்கள் படும் பாடு கிலியை ஏற்படுத்துவதாக உள்ளது.
மராட்டிய மாநிலத்தின் சந்திராபூர் மாவட்டத்தில் உள்ள பல்லாப்பூர் என்ற வனப்பகுதி கிராமத்திற்குள் நேற்று சிறுத்தை புலி ஒன்று புகுந்தது. குடியிருப்புகளுக்குள் புகுந்த சிறுத்தைப் புலி குறித்த தகவல் வனத்துறையினருக்கு தெரிவிக்கப் பட்டது.
வனத் துறையினர் வருவதற்குள்ளாக அழையா விருந்தினராக விவசாயி ஒருவரின் வீட்டிற்குள் நுழைந்தது சிறுத்தைப் புலி. முன்வாசல் வழியாக சிறுத்தைப் புலி நுழைவதைப் பார்த்த வீட்டின் உள்ளே இருந்தவர்கள் உயிரைக் கையில் பிடித்தபடி, பதறிப் போய் பின் வாசல் வழியாக வீட்டை விட்டு வெளியேறினர்.
அதற்குள் சம்பவ இடத்திற்கு சிறுத்தைப் புலியை பிடிப்பதற்கு தேவையான வலை மற்றும் உபகரணங்களுடன் வந்து சேர்ந்தனர்.
வீட்டைச் சுற்றி வலை....
சிறுத்தைப் புலி புகுந்த வீடு ஓடுகளால் கூரை போடப்பட்டது. இதனால் அவ்வீட்டை விட்டு சிறுத்தை தப்பி விடாதபடி வீட்டைச் சுற்றி முதலில் வலை ஒன்று கட்டப்பட்டது.
வீட்டிற்குள் பதுங்கிய சிறுத்தை...
பின்னர் மெதுவாக வீட்டின் கதவைத் திறந்து வைத்தனர். ஆனால், வெகு நேரமாகியும் சிறுத்தையார் வெளியே வந்தபாடில்லை.
ஓட்டைப் பிரித்து பிடிக்க முயற்சி...
பொறுமையிழந்த வனத்துறையினர் ஓட்டைப் பிரித்து வீட்டிற்குள் இறங்கி சிறுத்தையைப் பிடிக்க முடிவு செய்தனர். இதற்காக வீட்டின் கூரையில் ஏறி, ஓட்டைப் பிரிக்க ஆரம்பித்தனர் அவர்கள்.
பாய்ந்து வந்த சிறுத்தை...
ஆனால், அப்போது யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் கூரையைப் பிய்த்துக் கொண்டு சிறுத்தை வெளியே வந்தது. இதனைக் கண்ட பொதுமக்களும், வனத்துறையினரும் அலறி ஓடினர்.
பிடிபட்டது...
பின்னர் மீண்டும் வீட்டிற்குள் குதித்த சிறுத்தை வீட்டின் குளியலறையில் பதுங்கியது. நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் சிறுத்தை பிடிபட்டது.
சிகிச்சை...
ஆனபோதும், சிறுத்தை தாக்கியதில் இருவர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர்.
வீடுகள் சேதம்...
இந்த சம்பவத்தில் எவ்வித உயிரிழப்புகளும் ஏற்படாத நிலையில் அப்பகுதியில் சில வீடுகள் மாத்திரம் சேதமாகியுள்ளன. சிறுத்தை பிடிபட்டதையடுத்து அப்பகுதி மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
வீடாகும் காடுகள்...
சட்டவிரோதமாக மரங்கள் அழிக்கப் படுதல் மற்றும் வனப்பகுதியில் புதிய குடியேற்றங்களை அமைத்தல் போன்ற காரணங்களாலேயே இவ்வாறு வனவிலங்குகள் குடியேற்றப் பகுதிக்குள் நுழைகின்றன என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.